மகளிர் இட ஒதுக்கீடு மசோதா- கேபினட் இன்று பரிசீலனை
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெணக்ளுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா தயாராகி பல காலமாக கிடப்பில் உள்ளது.
மசோதாவை தாக்கல் செய்யவே முடியாத நிலை காணப்படுகிறது. பல முக்கியக் கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த மசோதாவை இன்று மத்திய அமைச்சரவை பரிசீலிக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது. கடந்த 2008ம் ஆண்டு மகளிர் மசோதா ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் லோக்சபாவுக்குள் நுழைய முடியாத நிலை காணப்படுகிறது.
மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா கடந்த 1996ம் ஆண்டு தேவே கெளடா ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதாகும். அன்று முதல் இன்று வரை அதை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு இந்த மசோதாவை அப்போதைய சட்ட அமைச்சர் ராம் ஜேட்மலானி தாக்கல் செய்ய எழுந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதைப் பறித்து கிழித்து எறிந்தனர்.
2008ம் ஆண்டிலும் ராஜ்யசபாவில் இந்த மசோதாவை அப்போதைய சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் அறிமுகப்படுத்தியபோது, பறிக்க முயற்சி நடந்தது. ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாராயணசாமியும், ரேணுகா சவுத்ரியும், அவரைச் சுற்றி அரண் போல நின்று காத்தனர். இதனால் மசோதாவை யாரும் பறிக்க முடியாமல் போனது.
இந்த நிலையில், திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஆற்றிய உரையில், மகளிர் மசோதா தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ் கூட்டணி அரசு தீவிரமாக உள்ளது.
ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. தற்போதைய மசோதாவுக்கு லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதாவால் நகர்ப்புற பெண்களுக்குத்தான் லாபம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற எதிர்ப்புகளைத் தாண்டி மத்திய அரசு இந்த மசோதாவை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications