பொருளாதார உதவி நடவடிக்கைகளுக்கு விடை கொடுக்கிறது அரசு- சுங்க வரி கணிசமாக உயர்வு
டெல்லி: பொருளாதார தாழ்வு நிலை காரணமாக கடந்த ஓராண்டாக மத்திய அரசு அளித்து வந்த பல்வேறு நிதிச் சலுகைகளை படிப்படியாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் முன்னோட்டமாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் சுங்க வரி உயர்வு 2 முதல் 10 சதவீதம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மீண்டும் மீட்சிப் பாதையில் திரும்பி வருவதாக பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இதையடுத்து மத்திய அரசு இதுவரை கொடுத்து வரும் பொருளாதார உதவி நடவடிக்கைகளை படிப்படியாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் முதல் படியாக அனைத்து எண்ணை அல்லாத பொருட்களுக்கான சுங்க வரிகள் 2 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2 கட்டங்களாக சுங்க வரியை 6 சதவீத அளவுக்கு மத்திய அரசு குறைத்திருந்தது. அதற்கு முன்பு அது 14 சதவீதமாக இருந்தது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வந்ததைத் தொடர்ந்து சுங்க வரியை 2 கட்டங்களாக அரசு குறைத்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முயற்சித்தது.
ஆனால் தற்போது பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அதேசமயம் சேவை வரி தொடர்ந்து பத்து சதவீதமாக நீடிக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
முன்பு சேவை வரி 12 சதவீதமாக இருந்தது. பின்னர் பொருளாதார ஊக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக அது 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து அதே 10 சதவீதமாக அது நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ள வரித் திட்டங்கள் மூலம், சுங்க வரி மற்றும் சேவை வரி ஆகியவை சமமான அளவில் அதாவது 10 சதவீதமாக இருக்கும்.
விசேஷம் என்னவென்றால், பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் திரும்பியுள்ளதாக பிரணாப் முகர்ஜி கூறினாலும், நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்து. அதற்கு முந்தைய காலாண்டில் அது 7.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications