இரட்டைக் கொலை: 2 இலங்கைத் தமிழர்கள் கைது-கரூர் எஸ்.பி-க்கு பாராட்டு
கரூர்: கரூரில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில், இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேரை கரூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரூர் வடக்கு காந்திகிராமம், ஜி.ஆர்.வி. நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ராம்பிரகாஷ் (12) என்ற மகனும் தீபிகா (7) என்ற மகளும் இருந்தனர்.
கடந்த 2007 செப்டம்பர் 17 அன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த குழந்தைகள் மிக கொடூரமான முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர்.
இது கொலையில் சம்பந்தப்பட்ட குற்வாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கரூரில் உள்ள பல்வேறு அரசியல்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தது.
ஆனால் ஒரு சில அரசியல் தலையீடு காரணமாக இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதில் காவல்துறை மெத்தனம் காட்டி வந்தது.
இந்த நிலையில், கரூர் மாவட்ட எஸ்.பியாக சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற டாக்டர் தினகரன், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விசாரணை நடத்தி உடனே கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சுமார் 200 பேரிடம் விசாரணை நடத்தி 116 பேரின் ரத்தம், கைரேகை, தடயம் ஆகியவை சேகரிக்கப்பட்டு புலன் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கொள்ளையடிக்க சென்ற போது, குழந்தைகள் இடையூறாக இருந்ததாலும், அங்கு பணம், பொருட்களும் கிடைக்காததால், கஞ்சா போதையில் இருந்த அவர்கள் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்தாக குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து, கொலை வழக்கில் தொடர்புடைய ராயனூர் இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்த கதிர்வேல் மகன் குமார், செல்வம் மகன் தங்கபாண்டி மற்றும் முரளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.பியின் அதிரடி நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகளும் , சமூக அமைப்புகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த கொலை வழக்கு கரூர் எஸ்.பி. தினகரனின் கடும் முயற்சியால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications