பட்ஜெட் எதிரொலி: அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வு!
மும்பை: பட்ஜெட் எஃபெக்டாக பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
பட்ஜெட் காரணமாக, கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அம்பானி சகோதரர்களில் மூத்தவரான முகேஷ் அம்பானிக்கு நேற்று முன்தினம் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 209 கோடியாக இருந்தது.
நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அவர் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 633 கோடியாக உயர்ந்தது. ஒரே நாளில், அதுவும் சில நிமிடங்களுக்குள் அவரது சொத்து மதிப்பு ரூ. 2 ஆயிரத்து 424 கோடி அதிகரித்துள்ளது.
அவரது தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 73,417 கோடியில் இருந்து ரூ. 75,134 கோடியாக உயர்ந்துள்ளது. அவருக்கு ஒரே நாளில் ரூ. 1,987 கோடி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
தொழில் அதிபர் பிர்லாவுக்கு பட்ஜெட் மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதற்கு முன்பு அவரது சொத்து மதிப்பு ரூ. 35,581 கோடியாக இருந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவரது சொத்து மதிப்பு ரூ.36,666 கோடியாக உயர்ந்துள்ளது.
விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜிக்கு ரூ. 946 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டலுக்கு 535 கோடி ரூபாய் சொத்து அதிகரித்துள்ளது.
டாடா தொழில் குழுமத்துக்கு ரூ. 87 கோடி சொத்து அதிகரித்துள்ளது. சிலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்போசிஸ் நாராயண மூர்த்திக்கு ரூ. 40 கோடி சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
இது பெருந்தொழிலதிபர்களுக்கு இந்த பட்ஜெட்டால் கிடைத்த உடனடிப் பலன். பொதுமக்களுக்கு கிடைத்த உடனடி பலன் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுதான்!












Click it and Unblock the Notifications