பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முடக்க சதி! - அபிமன்யு குற்றச்சாட்டு !
தூத்துக்குடி: பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் மக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வசதியாக பி.எஸ்.என்.எல்.ஐ. நிறுவனத்தை முடக்க சதி நடைபெறுவதாக ஊழியர் சங்க அகில இந்திய துணை பொதுச் செயலாளர் பி. அபிமன்யு குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க 5 வது தமிழ் மாநில மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாடு இன்று துவங்கி மார்ச் 2 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க அகில இந்திய துணை பொதுச் செயலாளர் பி. அபிமன்யு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த மாநாட்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு உரிய கருவிகள் வாங்கி, அதை தனியாரோடு போட்டிபோட வைப்பதற்கான வழிவகைகள் குறித்து மத்திய அரசிற்கு வலியுறுத்த உள்ளோம்.
பி.எஸ்.என்.எலின் பத்து சதவீத பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
கடந்த சில நிதியாண்டுகளாக பி.எஸ்.என்.எல். வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு மத்திய அரசின் தவறான கொள்கை, நிர்வாகத்தில் தலையீடே காரணம்.
நெட்வெர்க்கை விரிவாக்கம் செய்ய ஆக்கப்பூர்வமான முயற்சிகள் ஏதும் செய்யவில்லை. மேலும் , கடந்த மூன்று ஆண்டாக புதிய கருவிகள் எதுவும் வாங்கப்படவில்லை. மாறாக கருவிகள் வாங்க விடப்பட்டிருந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால், தனியார் நிறுவனங்களோடு போட்டிபோட முடியாத நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் உள்ளது.
இவைகளை வைத்து பார்க்கும் போது பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் மக்களிடம் கொள்ளை அடிப்பதற்காக பி.எஸ்.என்.எல்.ஐ. முடக்க சதி நடப்பதாகவே தெரிகின்றது. இதற்கு, உயரதிகாரிகள் திரை மறைவில் உடந்தையாக உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.