இந்தியர்களைத் தேடித் தேடிக் கொன்ற தலிபான் தீவிரவாதிகள்
காபூல்: காபூலில் தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகள், இந்தியர்களைத் தேடித் தேடிக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காபூலில் நேற்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 6 இந்தியர்கள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இந்தியர்களில் இரண்டு பேர் ராணுவ அதிகாரிகள் ஆவர். இவர்கள் தவிர ஐந்து இந்திய ராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இந்தியர்களைக் குறி வைத்து நடந்திருப்பதாக இந்தியத் தூதர் ஜெயந்த் பிரசாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை தாக்குதல் சம்பவம் போல இது தோன்றுகிறது.
இந்தியர்களைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தியர்களை ஒவ்வொரு (ஹோட்டலில்) அறையாக போய்த் தேடித் தேடிக் கொன்றுள்ளனர் என்றார்.
விபத்தில் கொல்லப்பட்ட இந்தியர்களின் பெயர்கள் - மேஜர் லாய்ஷ்ராம் ஜோதின் சிங், மேஜர் தீபக் யாதவ், என்ஜீனியர் போலா ராம், தபலா கலைஞர் நவாப் கான், காந்தஹார் துணைத் தூதரக ஊழியர் நிதீஷ் சிப்பர், இந்திய-திபெத்திய காவல் படை காவர் ரோஷன் லால்.
உயிரிழந்த ஆறு இந்தியர்களின் உடல்களையும் கொண்டு வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் ஒன்று காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து இந்த விமானம் கிளம்பிச் சென்றது.
காயமடைந்தவர்களும் இதிலேயே அழைத்து வரப்படவுள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடம் பார்க் ரெசிடென்ஸ் எனப்படும் ஹோட்டலாகும். இங்கு இந்திய தூதரக அலுவலகம் பல அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளது. அங்கு இந்தியாவிலிருந்து வரும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்களும் கூட இங்கு தங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications