டிஎன்பிஎஸ்ஸி வனத்துறை அலுவலர் தேர்வு திடீர் ரத்து!
சென்னை: தமிழக வனத்துறையில் 79 பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணிக்கான காலி இடங்களை நிரப்ப நாளை நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்ஸி போட்டித் தேர்வுகள் திடீரென ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், விவசாயம், வனவியல் போன்ற படிப்புகள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், தேர்வை டி.என்.பி.எஸ்.சி. திடீரென ரத்து செய்துள்ளது.
பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியில் பி.எஸ்சி. வனவியல் பட்டதாரிகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோவை வனக்கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது, பாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் பி.எஸ்சி. வனவியல் பட்டதாரிகளுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க அரசு திடீரென முடிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஸ்டேட் வங்கி தேர்வு-கணிதப் பாடம் நீக்கம்!
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பதிவிக்கான தேர்வில் வழக்கமாக இடம்பெறும் கணிதப் பாடம் நீக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும், பன்னாட்டு வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அதேநேரத்தில், அரசு வங்கிகள் போட்டிப்போட்டு ஆயிரக்கணக்கிலான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு துறைகளில் பணிநியமன தடைச் சட்டம் அமலில் இருந்தால் வங்கித்துறை உள்பட அனைத்து துறைகளிலும் காலி இடங்கள் குவிந்தன.
தற்போது, அந்த காலி இடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. நாட்டின் பெரிய அரசுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த ஆண்டு மட்டும் 27000 பணியாளர்களை தேர்வு செய்கிறது.
இதில் 4,500 அதிகாரிகள் பணி தேர்வு செய்வதற்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் இந்த அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பொதுவாக வங்கிப் பணிகளுக்கான எழுத்துத்தேர்வில் கணிதம், பொதுஅறிவு, ஆங்கிலம், ரீசனிங் ஆகிய 4 பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். இதைத்தொடர்ந்து ஆங்கிலத்தில் விரிவாக விடை எழுதக்கூடிய தேர்வு நடத்தப்படும். இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தேர்வில் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, கணிதப் பாடப்பிரிவு நீக்கப்பட்டு, அதற்கு பதில் டேட்டா அனலிசிஸ் மற்றும் இன்டர்பிரட்டேஷன் (வங்கி சம்பந்தப்பட்ட விஷயங்கள்) என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரீசனிங் பிரிவு இன்னும் சற்று கடினமான கேள்விகளைக் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள 4,500 காலி இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 2ம் தேதி ஆகும். முன்பு அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுநாள் (ஏப்ரல் 11) தற்போது ஏப்ரல் 18க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அரசு வங்கிகளில் மட்டும் 40,000 காலி இடங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தேர்வுகளுக்குமே இந்த தேர்வு முறை மாற்றம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications