பெண் சபலத்தால் ரூ.4.5 லட்சத்தை இழந்த லாரி டிரைவர் தற்கொலை முயற்சி
பழனி: பெண் சபலத்தால் ரூ.4.5 லட்சத்தை கொள்ளையர்களிடம் பறிகொடுத்துவிட்டு, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற லாரி டிரைவர், பலத்த தீக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த லாரி டிரைவர் தர்மராஜ் (40). இவர் சிவகங்கையில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்று கேரளாவில் விற்றார்.
பின்னர் திரும்பி வரும் போது கேரளாவில் இருந்து தீப்பெட்டி கழிவுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே இறக்குவதற்காக வந்து கொண்டிருந்தார்.
பெரியகண்ணாடி புதூர் புதுக்குளத்தை சேர்ந்த தனபால்(29) என்ற கிளீனரும் உடன் இருந்தார். பழனியை அடுத்த கணக்கன்பட்டி அருகில் உள்ள தாய் மூகாம்பிகை கோவில் அருகே நேற்று காலை 5 மணிக்கு லாரி வந்தது.
அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் லாரியை நிறுத்தினார். தர்மராஜ் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னாலேயே தனபாலும் இறங்கி வந்தார்.
அப்போது புதர் மறைவில் இருந்த 3 பேர் திடீரென்று கத்தியுடன் பாய்ந்து வந்து டிரைவர் தர்மராஜையும், தனபாலையும் சூழ்ந்து கொண்டனர். தர்மராஜ் அணிந்திருந்த லுங்கியை கழட்டி இருவரின் கைகளையும் மர்ம கும்பல் கட்டிப் போட்டது.
பின்னர் 3 பேரும் லாரியில் ஏறி அங்கிருந்த பெட்டியை உடைத்து ரூ.4.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த பெண்ணுடன் தப்பி ஓடி விட்டனர்.
சிறிது நேரம் கழித்து கைக்கட்டை அவிழ்த்துக்கொண்டு, போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் டிரைவர் தர்மராஜ்.
எனினும் பணம் உடனடியாக திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை என்று நினைத்த டிரைவர் தர்மராஜ், லாரி உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது என்ற பயத்தில் டீசலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி பழனியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications