சிலி பூகம்பம் பலி 800 ஆனது: வன்முறை-ஊரடங்கு

உணவுக்காக ஆங்காங்கே சூறையாடல்களும் வன்முறைகளும் வெடித்துள்ளதால் பூகம்பம் தாக்கிய பல பகுதிகளில் அந் நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவைப் பிற்பபித்துள்ளது.
மீட்புப் பணியில் சுமார் 10,000 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்கா நாடான சிலியை கடந்த சனிக்கிழமை 8.8 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் தாக்கியது. இதையடுத்து பசிபிக் கடலில் உருவான பயங்கர அலைகள் சிலியின் பல பகுதிகளைத் தாக்கின.
காஸ்டிடூயூசன் நகரில் கடலோர சாலைகளில் சென்று கொண்டிருந்த ஏராளமான கார்கள் தூக்கி வீசப்பட்டன. ஆனால், அவை சுனாமி அலைகளாக இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
அதே நேரத்தில் பசிபிக் கடலில் உருவான இந்த அலைகள் சுனாமி அலைகளாக மாறி 36 மணி நேரம் பயணித்து ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் மற்றும் ரஷ்யாவைத் தாக்கின. ஆனால், அலைகள் சில அடி உயரம் மட்டுமே இருந்ததால் அங்கும் பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந் நிலையில் சிலியில் பயங்கர மழையும் பெய்ய ஆரம்பித்துள்ளதால் நிலநடுக்கத்தால் இடிந்து போயுள்ள பல பகுதிகள் மேலும் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றன.
முழு அளவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு வானிலை உள்ளது. நிவாரணங்கள் வந்து சேராததால் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் உணவுக்காக ஆங்காங்கே வன்முறையிலும் சூறையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 800 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், பலியானோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் சிலி நாட்டுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications