இந்தியா மீது புனிதப் போர் தொடுக்க வேண்டும்- கூறுகிறார் ஹபீஸ் சயீத்

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர் இந்த சயீத்தான். இவரை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை கோரி வருகிறது இந்தியா. ஆனால் பாகிஸ்தான் ஆதாரம் வேண்டும், ஆதாரம் வேண்டும் என்று மட்டும் பேசிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் மண்ணில் இருந்தபடி இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளார் இந்த சயீத்.
இதுகுறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு சயீத் அலித்துள்ள ஒரு பேட்டியில், இந்தியா போரை தான் விரும்புகிறது. பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பவில்லை. அந்த பட்சத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும். அதற்கு என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை.
மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டதாக என் மீது இந்தியா புகார் கூறியுள்ளது. அந்த புகாரை எந்த கோர்ட்டிலாவது இந்தியா நிரூபிக்கட்டும். அதன் பிறகு அவர்கள் கூறும் எந்த குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொள்கிறேன்.
இந்தியாவுக்கு எதிராக புனித போர் நடத்த பாகிஸ்தான் மக்கள் காஷ்மீருக்கு செல்ல வேண்டும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசு பயந்தாங்கொள்ளியாக கோழைத்தனமாக நடந்து கொள்கிறது என்றார் சயீத்.
லஷ்கர் இ தொய்பாவை நிறுவியவர்தான் இந்த சயீத். தொலைக்காட்சிப் பேட்டியின்போது முகத்தைக் காட்டாமல் மூடியபடி இருந்தார் சயீத். அதுகுறித்து செய்தியாளர் கேட்டபோது, ஷரியா சட்டப்படி எனது முகத்தைக் காட்ட எனக்கு அனுமதி இல்லை என்றார் சயீத்.
சமீபத்தில்தான் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர்கள் பேச்சு நடத்தினர். அப்போது சயீத் போன்றவர்கள், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை மேற்கொள்வதைத் தடுத்து நிறுத்துமாறு இந்தியா கண்டிப்புடன் பாகிஸ்தானுக்குத் தெரிவித்திருந்தது.
அதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலாளர் சல்மான் பஷீர், பாகிஸ்தான் அரசுக்காகவோ அல்லது மக்களுக்காகவோ சயீத் பேசுவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாகி்ஸ்தான் டிவி மூலம் இந்தியா மீது புனிதப் போர் தொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சயீத்.
இதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடுமையாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications