டீசல் விலையைக் குறைக்க திமுக, திரினமூல் நெருக்குதல் - காங். தவிப்பு- பிரணாப் பிடிவாதம்
டெல்லி: டீசல் விலையைக் குறைத்தேயாக வேண்டும் என்று மமதா பானர்ஜியும், திமுகவும் காங்கிரஸுக்கு கடும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை அதிகரித்துள்ளதால், நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலை ஏறி விட்டது. விரைவில் பாரிக் கமிட்டி பரிந்துரைகள் மீது மத்திய பெட்ரோலியத்துறை முடிவெடுக்கவுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மேலும் மோசமாகும் என்று மக்கள், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்து மக்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்திய நிலையில், காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மமதா பானர்ஜி கடும் அதிருப்தியை வெளியிட்டு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி பிரதமருக்கும், சோனியாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இதேபோல முதல்வர் கருணாநிதியும், திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம் டீசலுக்கான வரி விதிப்பையாவது குறைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால் பிரணாப் முகர்ஜியோ, வரி உயர்வை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிடிவாதமாக கூறி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சியினர் மத்திய அரசை நெருக்கி இறுக்கும் சமயத்தில் கூட்டணிக் கட்சிகளும் அவர்களுடன் இணைந்தால் நிலைமை சிக்கலாகி விடும் என காங்கிரஸ் கட்சி கருதுகிறது.
எனவே இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், திமுகவும், திரினமூல் காங்கிரஸும் எங்களது நம்பகமான தோழர்கள். அவர்களுடன் பேசுவோம். பிரச்சினை தீர்வு காண்போம். இது கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான். சரி செய்து விடுவோம் என்றார்.
பிரணாப் முகர்ஜி காட்டம்...
இதற்கிடையே, நேற்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜியிடம், பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி உயர்வு திரும்பப் பெறப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கோபத்துடன் பதிலளித்த பிரணாப், ஒரு திட்டத்தை அறிவிக்கிறோம் என்றால் அதை செயல்படுத்தத்தான் அறிவிப்போம், திரும்பப் பெறுவதற்காக அல்ல.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் அரசு சீர்குலைந்து போய் விடும். எனவே திரும்பப் பெறுவது என்பது அவ்வளவு எளிதானல்ல.
திமுகவுடன் நாங்கள் ஆறு வருடமாக பழகி வருகிறோம். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையேதான் கருத்து வேறுபாடு. உங்களுடன் (பத்திரிக்கையாளர்கள்) இல்லை. உங்களுடன் நாங்கள் பேச வேண்டிய அவசியமும் இல்லை.
கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து பேதங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம். முன்பும் பல விஷயங்களில் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்தோம். அதேபோல இப்போதும் சரி செய்து விடுவோம். எனவே அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்றார் கோபமாக.
கேரளாவில் நாளை ஸ்டிரைக்
இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்ச் 2ம் தேதி (நாளை) கேரளாவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் மார்ச் 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆட்டோ, டாக்சி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் தனியார் பஸ் ஊழியர்கள், மற்றும் இடதுசாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு பஸ் ஊழியர்களும் கலந்து கொள்ள போவதாக அறிவித்துள்ளனர். இதனால் மார்ச் 2ம் தேதி கேரளாவில் அரசு பஸ், தனியார் பஸ், ஆட்டோ, டாக்சி ஓடாது.












Click it and Unblock the Notifications