ஜோதிடருடன் கள்ளக்காதல்: கணவனை கொன்ற மனைவி
நெல்லை: கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி 6 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமதி.
கடந்த 2004ம் சங்கரலிங்கம் திடீரென இறந்தார். வாயில் விஷம் ஊற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சங்கரலிங்கம் தற்கொலை செய்துகொண்டதாக மனைவி கோமதி கூறினார்.
ஆனால், சங்கரலிங்கம் தற்கொலை செய்து இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஜோதிடர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கோமதி தனது கணவனை தானே கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து கோமதி, ஜோதிடர் முப்புடாதி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு குறித்து போலீசார் கூறுகையில்,
'கடந்த 2003ம் ஆண்டு, நடத்துனர் சங்கரலிங்கம் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சங்கரலிங்கம், தன் மனைவி கோமதியை அழைத்துக் கொண்டு ஜோதிடரை பார்க்க வீரவநல்லூர் சென்றுள்ளார்.
அங்கு ஜோதிடர் முப்புடாதியை இருவரும் சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளனர். சங்கரலிங்கத்தின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்த ஜோதிடர் கடனை அடைக்க சில பரிகாரங்கள் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
பரிகார வேலை தொடர்பாக கோமதி அடிக்கடி முப்புடாதியை சந்தித்து வந்தார். இதில் முப்புடாதிக்கும், கோமதிக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டது.
இதனையறிந்த சங்கரலிங்கம் கோமதியை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த கோமதி தன்னுடைய கள்ளத் காதலன் முப்புடாதியிடம் சங்கரலிங்கத்தை கொலை செய்து விடுமாறு கூறினார்.
கொலை செய்து விட்டு கோமதியும் முப்புடாதியும் சேர்ந்து வாழ திட்டமிட்டனர். இதையடுத்து, வீரவநல்லூரை சேர்ந்த ஐயப்பன் என்ற மணிக்கண்டன் மூலம், சங்கரலிங்கத்தை கொலை செய்வதற்கு 2 லட்ச ரூபாய் அளித்தார்.
ஐயப்பன் தனது கூட்டாளிகள் 5 பேரை அழைத்துச் சென்று கடந்த 2004ம் ஆண்டு சங்கரலிங்கத்தின் கழுத்தை நெறித்தும், அவரது வாயில் விஷத்தை ஊற்றியும் கொலை செய்தனர்.
பின்னர் கோமதி தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினரை நம்ப வைத்தார். பின்னர் கோமதியும், ஜோதிடர் முப்புடாதியும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்' என்றனர்.