சந்தன மரம்-புலித் தோல்: நித்தியானந்தா மீது கர்நாடக வனத்துறை வழக்கு!

நித்தியானந்தா விவகாரம் இன்று கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது. அவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் ஆச்சார்யா பதிலளிக்கையில், நித்தியானந்த சாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் அவருடைய தலைமை மடம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. எனவே தமிழகத்திலிருந்து போதிய தகவல்கள் திரட்டப்பட்ட பின்னர் நித்தியானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசுகையில், நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும். அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.
பெங்களூர் அருகே உள்ள பிடுதியில் நித்தியானந்தாவின் தலைமை தியான பீடம் உள்ளது. அங்கு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் இன்று இந்த தியா பீடத்தில், கர்நாடக வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நித்தியானந்தம் முறைகேடாக ஏராளமான சந்தன மரங்களை தனது ஆசிரமத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா பயன்படுத்திய புலித் தோலையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், நித்தியானந்தா உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications