மும்பை பயங்கரவாத தாக்குதல் - தொடர்புடைய 20 பேரின் பெயரை வெளியிட்டது பாக்.
இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கூறி 20 பேரின் பெயர் அடங்கிய பட்டியலை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் கசாப் மட்டுமே உயிருடன் சிக்கினான். மற்ற 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டனர்.
இவர்களை ஏவி விட்டு பயங்கரவாத செயலை அரங்கேற்றிய லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத், லக்வி உள்ளிட்ட பலரின் தொடர்புகள் குறித்த ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா பலமுறை கொடுத்தும், அவர்கள் குறித்து பாகிஸ்தான் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது.
இந்த நிலையில் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி பாகிஸ்தான் அரசு 20 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு 119 தீவிரவாதிகளைத் தேடி வருகிறதாம். இதில் 20 பேருக்கு மும்பைத் தாக்குதலில் தொடர்பு உள்ளதாம்.
119 பேரில், அமெரிக்க புலனாய்வு அமைப்பால் தேடப்படும் பயங்கரவாதிகள் 33 பேர்.
இருப்பினும் இந்தப் பட்டியலில் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் உள்ளிட்ட இந்தியா கோரியுள்ள முக்கியத் தீவிரவாதிகளின் பெயர்களையே காணோம்.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முகமது அம்ஜத் கான் (மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கராச்சியில் தங்க வைத்தவன்), பைசாபாத்தைச் சேர்ந்த இப்திகார் அலி(மும்பை தாக்குதலுக்கு தேவையான தகவல்களை இன்டர்நெட்டில் கொடுத்தவன்), சூபியன் ஜபார், முகமது உஸ்மான் ஜியா, முகமது அப்பாஸ், ஜாவித் இக்பால், முக்தார் அகமது, அகமது சயீது ஆகியோர் மும்பை தாக்குதலுக்கு பண உதவி செய்தவர்கள்.
அல் ஹூசைனி, அல் பவுஸ் ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு படகு கொடுத்து உதவியவர்கள் என, பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மும்பைத் தாக்குதலின் மூளையே சயீத்தான். அவன் குறித்த அனைத்து ஆதாரங்களையும் ஏற்கனவே இந்தியா பலமுறை கொடுத்தும் அவனை கண்டு கொள்ளவே இல்லை பாகிஸ்தான். இதற்கு அது கூறியுள்ள காரணம்- இந்தியா கொடுத்த ஆதாரங்கள் போதுமானவையாக இல்லையாம்.
கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்கள் பேச்சுவார்த்தையின்போது சயீத் தொடர்பான புதிய ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியது.
ஆனால் சயீத் தொடர்பான ஆதாரங்கள் எதுவுமே போதுமானதாக இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
புதிய ஆதாரங்களில் சயீத் மீது நடவடிக்கை எடுப்பதற்கான போதிய தகவல்கள் இல்லை என்றும், அவர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதற்கான தகவல்கள் இல்லை என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் மீது வழக்கு தொடர முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சயீதை, இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசும்போது பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு கவலை தெரிவித்தார்.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி சயீதை, தொடர்ந்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் பேச அனுமதிக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கை சரியல்ல என்றும், மும்பை தாக்குதலில் அவருடைய பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சிதம்பரம் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications