தூத்துக்குடி: மலேசியாவுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள், பவளப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட அரியவகை கடல் அட்டைகள், பவளப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதில் பதப்படுத்தப்பட்ட ஆயிரத்து 50 கடல் அட்டைகளையும், 100 கிலோ பவளப்பாறைகளையும் அவர்கள் கைப்பற்றினர்.
விசாரணையில் இவை தூத்துக்குடியில் இருந்து கொச்சி வழியாக மலேசியாவுக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதில் தொடர்புடைய வீட்டு உரிமையாளர் ராமலிங்கம், திரேஸ்புரத்தை சேர்ந்த அண்டோ, ஷேக் மைதீன், அண்ணா காலனி ஜாபர், மற்றும் ஆர்வி புரம் சம்சுதீன், ஆகியோர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய திரேஸ்புரத்தை சேர்ந்த அப்துல்காதர், பீர் ஆகியோரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை, பவளப்பாறைகளின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.












Click it and Unblock the Notifications