மக்கள் டிவி அலுவலக தாக்குதலில் எங்களுக்குத் தொடர்பில்லை - ஜி.ராமகிருஷ்ணன்

நேற்று மாலை செய்தியாளர்களிடம் ராமகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
கட்சியின் மூத்த தலைவர் டபிள்யூ.ஆர்.வரதராஜனை கட்சியிலுள்ள ஒரு குழுவே அவரை கொலை செய்திருக்க கூடும் என்று மக்கள் டி.வி.யில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து மக்கள் டி.வி.யின் ஆசிரியரை நேரில் சந்தித்து ஆட்சேபனை தெரிவிக்க கட்சி நிர்வாகிகள் சென்றனர். அப்போது, எங்கள் கட்சியினரை தொலைக்காட்சி நிறுவனத்தை சார்ந்தவர்கள் தாக்கினர். இதில், பாலன் என்பவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
அந்த சமயத்தில் மக்கள் டி.வி. அலுவலகம் மீது நடந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இந்த நிலையில், பா.ம.க.வை சேர்ந்த 50 பேர் கட்சி அலுவலகத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அலுவலகத்தை தாக்கிய பா.ம.க.வினர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராமகிருஷ்ணன்.
99 பேர் கைது...
நேற்று நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு சம்பவங்கள் தொடர்பாக மாம்பலம் போலீசாரும், நுங்கம்பாக்கம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிபிஎம் தரப்பில் முக்கிய நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பீமாராவ், சண்முகம், ஆகியோர் உள்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ம.க. கவுன்சிலர் வெங்கடேசன் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னொரு பா.ம.க. கவுன்சிலர் பிரகாஷ் உள்பட சிலரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications