தேங்காய் விளைச்சல்: சரியும் கேரளா-உயரும் தமிழகம், கர்நாடகா
திருவனந்தபுரம்: தேங்காய் விளைச்சலில் முன்னணியில் உள்ள கேரளாவுக்கு அந்த பெருமை மெல்ல மெல்ல பறி போக ஆரம்பித்துள்ளது. மாறாக அண்டை மாநிலங்களான தமிழ்நாடும், கர்நாடகமும் தேங்காய் உற்பத்தியில் முன்னேற ஆரம்பித்துள்ளனவாம்.
'கேரா' என்பதற்கு தேங்காய் என்று பொருள். இதன் அடிப்படையில்தான் கேரளா என்ற பெயரும் வந்தது. அந்த அளவுக்கு கேரளா தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலமாகும்.
ஆனால் இது இப்போது பழம் கதையாகும் அபாயம் எழுந்துள்ளது. காரணம், தேங்காய் விளைச்சல் கேரளாவில் கணிசமான அளவுக்கு வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியுள்ளதாம்.
நாட்டின் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில் கேரளாவின் பங்கு மட்டும் 57 சதவீதமாக கடந்த 90களில் இருந்தது. ஆனால் கடந்த 2008ம் ஆண்டு இது 43 சதவீதமாக குறைந்து விட்டது.
அதேசமயம், தமிழகமும், கர்நாடகமும் சேர்ந்து ஆண்டுக்கு 41.43 சதவீத தேங்காய்களை உற்பத்தி செய்கின்றன. கேரள மாநில திட்டக் குழுவின் பொருளாதார ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1.90 மில்லியின் ஹெக்டேர் பரப்பளவுக்கு தேங்காய் விளைவிக்கப்படுகிறது. இதில் கேரளாவின் பங்கு மட்டும் 7.81 லட்சம் ஹெக்டேர்களாகும். மாநிலத்தின் மொத்தப் பயிர்களில் தேங்காயின் பங்கு மட்டும் 38 சதவீதமாகும்.
தேங்காய் விளைச்சலில் வலுவான இடத்தில் இருந்து வரும் கேரளாவுக்கு அதில் சரிவு காணப்பட்டாலும் கூட கடந்த நிதியாண்டில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தமிழ்நாடும், கர்நாடகமும், தேங்காய் உற்பத்தியில் படிப்படியாக முன்னேறி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications