இன்டர்நெட்டில் மூழ்கிப் போன தம்பதி-பசியால் துடித்து பரிதாபமாக இறந்த குழந்தை!

டிவி பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று நம் ஊரில் பொதுவான குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இப்போது அந்த இடத்திற்கு இன்டர்நெட் வந்து விட்டது. எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்பும், இன்டர்நெட்டிலும் மூழ்கிப் போய் விட்டார்கள் என்று புகார்கள் சாதாரணமாக எழ ஆரம்பித்து விட்டன.
ஆனால் அந்த இன்டர்நெட் மோகம் ஒரு பச்சைக் குழந்தையின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீதமாகியுள்ளது தென் கொரியாவில்.
சியோல் புறநகரைச் சேர்ந்தவ அந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை அது. இந்த நிலையில் அவர்களுக்கு தென் கொரியாவில் மிகவும் பிரபலமான ரோல் பிளேயிங் விளையாட்டான பிரியஸ் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் பிறந்தது.
அதாவது நமக்குப் பிடித்தமான குழந்தையை உருவாக்கி அதை வளர்ப்பதுதான் இந்த விளையாட்டின் விசேஷம். அந்த வகையில், இந்த தம்பதியும் அனிமா என்ற ஆன்லைன் குழந்தையை உருவாக்கி அதை வளர்க்கும் வேலையில் இறங்கி விட்டனர்.
இந்த விளையாட்டு மோகத்தில் பெற்ற குழந்தையை அவர்கள் கவனிக்கத் தவறினர். எந்த நேரம் பார்த்தாலும் இன்டர்நெட் பார்லரிலேயே பழியாய்க் கிடந்தனர். அனிமாவை வளர்க்க அவர்கள் காட்டிய ஆர்வத்தில் ஒரு பங்கைக் கூட பெற்ற குழந்தை மீது காட்டவில்லை.
ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து வந்துள்ளனர் அந்தத் தம்பதியினர். மற்ற நேரம் எல்லாம் அருகில் உள்ள இன்டர்நெட் பார்லருக்கு போய் அனிமாவை வளர்த்து வந்துள்ளனர்.
இப்படிப் பெற்றோரின் அரவணைப்பும், கவனிப்பும் இல்லாமல் வாடி வதங்கிப் போன அந்த 3 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரையே விட்டு விட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி சுங் ஜின் வான் கூறுகையில், அவர்களுக்கு வேலை இல்லை. குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்ததால் குழந்தை மீதும் பாசம் வரவில்லை. ஆன்லைன் விளையாட்டுக் குழந்தையை வளர்க்க ஆர்வம் கொண்டிருந்தனர். இது இப்போது விபரீதத்திற்கு இட்டுச் சென்று விட்டது என்றார்.
தென் கொரியாவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications