தென் மாவட்ட கூலிப்படை கும்பலை சுற்றிவளைக்க போலீஸ் தீவிரம்
நெல்லை: நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி எஸ்எஸ் சிங்கிடம் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து தென்மாவட்ட கூலிப்படையினர் போலீஸ் வலையில் விரைவில் சிக்குவார்கள் என தெரிகிறது.
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் எஸ்எஸ் சிங் நாடார். கராத்தே செல்வின் கூட்டாளியான இவர் காமராஜர் ஆதித்தனர் கழக பொருப்பாளராக இருந்து வருகிறார்.
இவர் மீது கட்டத்துரை கொலை, வெடிகுண்டு வைத்திருந்தது, ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் உள்ளன. தலைமறைவாக இருந்த அவரை சுட்டுபிடிக்க உத்தரவிடப்பட்டது.
கடந்த மாதம் சென்னையில் எஸ்எஸ் சிங்கை போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இது தொடர்பாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை இரு நாட்களுக்கு முன்னர் நெல்லை குற்றவியல் 5ம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் கோர்ட் அனுமதியுடன் நெல்லை தனிப்படையினர் எஸ்எஸ் சிங்கை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் கூலிப்படைகள் பற்றிய தகவல் கிடைத்தது.
தென்மாவட்டங்களில் இயங்கி வரும் கூலிப்படை கும்பலை கூண்டோடு கைது செய்யுமாறு நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி ஆஸ்ரா கார்க் ஆகியோர் தனிப்படையினருக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தென்மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூலிப்படையை கைது செய்ய பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
எஸ்எஸ் சிங்கை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருவதை அறிந்த கூலிப்படை தலைவர்களில் சிலர் சென்னை, பெங்களூர், ஐதரபாத் மற்றும் மும்பைக்கு தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications