மசோதா நகலைக் கிழித்து அமளி செய்த 7 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நேற்று ராஜ்யசபாவில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சில எம்.பிக்கள் அவைத் தலைவர் அன்சாரியிடமிருந்து மசோதா நகலைப் பறித்து கிழித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த அமளி காரணமாக நேற்று முழுவதும் நாடாளுமன்றத்திந் இரு அவைகளும் இயங்க முடியவில்லை.
இன்றும் காலையிலிருந்து இதுவரை அவைகளை நடத்த முடியாமல் உள்ளது.
ராஜ்யசபா காலையில் கூடியபோது அமளி ஏற்படவே. பிற்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 12 மணிக்கு மீண்டும் சபை கூடியதும், நேற்று அமளியில் ஈடுபட்டு அநாகரீகமாக நடந்து கொண்ட எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, எம்.பிக்கள் சுபாஷ் யாதவ், ராஜ்நீதி பிரசாத் (ராஷ்டிரிய ஜனதாதளம்), நந்த் கிஷோர், அமீர் ஆலம்கான், கமால் அக்தர், வீர்பால் சிங் (சமாஜ்வாடி), இஜாஸ் அலி (ஐக்கிய ஜனதாதளம்) ஆகியோரை நடப்பு கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானித்து குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
தீர்மானத்தை எதிர்த்து பெரும்பாலானோர் குரல் எழுப்பினர். ஆனாலும் தீர்மானம் நிறைவேறியதாக அன்சாரி அறிவித்து சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
சஸ்பெண்ட் ஆன எம்.பி்க்கள் வெளியேற்றம்:
இந்த நிலையில், ராஜ்யசபா தலைவரின் தீர்ப்பை ஏற்காமல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 எம்.பிக்களும் அவையிலிருந்து வெளியேற மறுத்து அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.
இதைத் தொடர்ந்து மார்ஷல்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 7 எம்.பிக்களையும் வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்று விட்டனர்.
இன்று பிற்பகல் 12 மணிக்கு ராஜ்யசபா கூடியபோது இந்த 7 பேரையும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சபை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் தங்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்ப்பை எதிர்த்து 7 எம்.பிக்களும் சபையை விட்டு வெளியேறாமல் அவையின் மையப் பகுதியில் போய் அமர்ந்து கொண்டு தர்ணாவில் குதித்தனர்.
2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோதும் தர்ணாவைத் தொடர்ந்தனர். இதையடுத்து சபை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும் அவர்கள் போகவில்லை. இதையடுத்து அவைக் காவலர்களைக் கொண்டு அவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications