மகளிர் மசோதாவால் அமளி - ராஜ்யசபா, லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும் கேள்விநேரத்தைத் தொடங்க அவைத் தலைவர் உத்தரவிட்டார்.
ஆனால் சமாஜ்வாடி கட்சியினர் எழுந்து முதலில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று கோரி கோஷமிடத் தொடங்கினர். மேலும் மகளிர் மசோதாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால் சபையை நடத்த முடியவில்லை. அனைவரும் அமைதியாக இருக்குமாறு அவைத் தலைவர் அன்சாரி பலமுறை கோரியும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
இதேபோல லோக்சபாவிலும் அமளி வெடித்ததால் பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
பாஜக பெண்கள் போராட்டம்...
இதற்கிடையே, மகளிர் மசோதாவுக்கு இடையூறு செய்யும் எம்.பிக்களைக் கண்டித்து பாஜகவைச் சேர்ந்த பெண்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பாஜக மகிளா மோர்ச்சா சார்பில் நாடாளுமன்ற நுழைவாயில் அருகே போராட்டம் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
மகளிர் மசோதாவை உரிய முறையில் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் நாடகம் போடுவதாக பிரதமர், மத்திய அரசு, சோனியா காந்தியைக் கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்துக் கேள்விப்பட்ட ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவிக்கையில், பாருங்கள், இந்த பாஜகவினர் எம்.பிக்களை கூட உள்ளே விடாமல் அவர்கள் தடுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி நாளை தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின பெண்களுக்கு சீட் தருவார்கள். இந்த பாதுகாப்பு மசோதாவில் இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம் என்று கேட்டார்.












Click it and Unblock the Notifications