பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் பரிசு
சென்னை: மாநில அளவில் அதிக பால் வழங்கிய தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
மாநில அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகமாக பால் வழங்கிய 10 உறுப்பினர்களுக்கு ரொக்கப்பரிசு, மாநில அளவில் சிறந்த 3 சங்கங்களின் செயலாளர்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
அதேபோல, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்ற 10 ஆவின் ஊழியர்களின் குழந்தைகளுக்கும், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களின் 5 குழந்தைகள், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களிலிருந்து 16 பால் உற்பத்தியாளர்களின் குழந்தைகள் ஆகிய 31 குழந்தைகளுக்கு லேப்டாப்களையும் ஸ்டாலின் வழங்கினார்.
லேப்டாப்களைப் பெற்ற மாணவ- மாணவியர்களின் பெற்றோர்கள் இந்த திட்டம் குழந்தைகளின் கல்வித்திறனை மேலும் ஊக்குவிக்கும் என மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள். இதுபோல் ஆவின் ஊழியர்களும், பால் உற்பத்தியாளர்களும் நன்றி தெரிவித்தனர்.
இதே விழாவில், சென்னை ஆவின் நிறுவனத்திற்கு, இந்தியத் தர நிர்ணய நிறுவனம் (பி.ஐ.எஸ்) சிறப்பான சுற்றுப்புறசூழல் மேலாண்மையை மேற்கொண்டு வருவதன் அடிப்படையில் உலகத்தரத்திற்காக வழங்கிய ஐ.எஸ்.ஓ. 14001: 2004 சான்றிதழை, தென் பிராந்திய பி.ஐ.எஸ். நிறுவன துணை இயக்குநர் ஜெனரல் கே.அன்பரசு ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஆவின் நிறுவனத்திற்கு வழங்கினார்.












Click it and Unblock the Notifications