போலீஸ் தடியடியால் 4 மாணவர்கள் பலி-தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழகத்தி்ல் போலீஸ் தடியடி காரணமாக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து நேர்மையான முறையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் படித்துவந்த வெளிமாநில மாணவர் கவுதம்குமார் சில தினங்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அதன்பின், சிகிச்சை பலனின்றி கவுதம்குமார் இறந்தார்.
அவருக்கு, பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, வெளிமாநில மாணவர்கள் கடந்த 28ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பயந்து அங்குமிக்கும் ஓடிய மாணவர்கள், பல்கலை வளாகத்திற்கு அருகில் உள்ள பாலமன் வாய்க்காலில் குதித்தனர்.
இந்த சம்பவத்தில் அப்போதே ஒரு மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். இந்த வாய்க்காலில் நேற்று இரு மாணவர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவத்தால் மொத்தம் நான்கு மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, கடலூர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு அரசு உத்தவிட்டுள்ளது.
இதற்கிடையே, பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் உண்மையை மூடிமறைக்க முயன்று வருவதாக தமிழக அரசு மீது மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக உண்மையான விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூரில், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே. எஸ். கனகராஜ், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில், மத்தியக்குழு உறுப்பினர் ஜோ.ராஜ்மோகன் தலை மையில் நூற்றுக்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில், சரபோஜி கல்லூரி மாணவர்கள் 1000 பேர் வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட செயலாளர் கரிகாலன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் 3 இடங்களிலும், மதுரையில் அமெரிக்கன் கல்லூரி முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல், இராஜபாளையம், திருச்சி, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ஈரோடு, சேலம் மற்றும் பாண்டிச்சேரியிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications