காங். எம்.பி பேச்சால் கோபம்- ராஜ்யசபாவிலிருந்து வெளியேறிய மமதா பானர்ஜி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜ்யசபாவில் நடந்த ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரவீன் ராஷ்டிரபால், மமதா பானர்ஜியை மறைமுகமாகத் தாக்கிப் பேசியதால் கோபமடைந்த மமதா அவையை விட்டு வெளியேறினார்.

ராஜ்யசபாவில் மகளிர் மசோதா மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தது மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ். அவரது இந்த கடைசி நேர பல்டி, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் நேற்று ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம் ராஜ்யசபாவில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரவீன் ராஷ்டிரபால், சில அமைச்சர்கள், அரசாங்கத்தின் ஒழுங்கு, கட்டுப்பாட்டுக்கு கீழ்ப்படிந்து நடப்பது இல்லை. அமைச்சரவையில் இடம்பெற்று விட்டால் பிரதமருக்கு கீழ்ப் படிந்து நடப்பதோடு அமைச்சரவை எடுக்கும் முடிவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

அவரது பேச்சு அவையில் இருந்த மமதாவை கடும் கோபத்தில் தள்ளியது. தனது இருக்கையிலிருந்து கடும் கோபத்துடன் எழுந்த மமதா வேகமாக வெளியேறினார். பின்னர் மைய மண்டபத்துக்குப் போய் உட்கார்ந்து கொண்டார்.

இதைப் பார்த்து எழுந்த பாஜக மூத்த தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா, காங்கிரஸ் உறுப்பினரின் பேச்சால் அமைச்சர் மமதா கோபத்துடன் வெளியேறி விட்டார். ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அமைச்சர் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

இதற்குப் பதிலளித்த அவைத் துணைத் தலைவர் ரஹ்மான் கான் இதுகுறித்து மமதாவுக்குத் தெரிவிக்கப்படும் என்றார். பின்னர் மமதாவை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தனர்.

இந் நிலையில் நேற்றிரவு சோனியா காந்தியை மமதா சந்தித்துப் பேசினார். மகளிர் மசோதா குறித்த தனது நிலையை சோனியாவிடம் மமதா விளக்கினார்.

ஏன் புறக்கணிப்பு? - மமதா விளக்கம்:

இதற்கிடையே, மகளிர் மசோதா மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தது ஏன் என்று மமதா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. அதை நிறைவேற்றுவோம். அதே நேரத்தில், ராஜ்யசபாவில் வாக்கெடுப்பு நடந்த போது தகவல் பரிமாற்ற இடைவெளி காரணமாக சிக்கலான நிலைமை ஏற்பட்டது. ராஜ்யசபாவில் எங்களுக்கு 2 உறுப்பினர்கள் உள்ளனர். எங்களுக்கு சரியான தகவல் தரப்படவில்லை.

பிரதமர் மன்மோகன் சிங்குடன் கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்திய போது, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. மேலும், சிறுபான்மை இன பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் அந்த கூட்டத்தில் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அனைத்துக் கட்சி கூட்டம் எதுவும் கூட்டப்படவில்லை. அது பற்றி எங்களுக்கு தகவலும் அளிக்கவில்லை.

வெற்றிகரமாக மகளிர் மசோதா நிறைவேறியதற்கான புகழை இடதுசாரிகள் சொந்தம் கொண்டாட முடியாது. டெல்லி மேல்சபையில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை இடதுசாரிகள் ஒருபோதும் விரும்பியது இல்லை. சாதாரண பெண்கள், ராஜ்யசபாவில் நுழைவதை அவர்கள் அனுமதித்தது கிடையாது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளைப் போல ராஜ்யசபாவிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை இடதுசாரிகள் தடுத்து விட்டனர்.

மகளிர் இட ஒதுக்கீட்டில் தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதம் நடத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா, ஓட்டெடுப்புக்கு வரும்போது எங்களுடைய நிலை குறித்து முடிவெடுப்போம் என்றார்.

தற்போது மமதாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்படும்போது சிக்கலாகி விடாமல் இருக்க இந்த நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், மகளிர் சட்ட மசோதா தொடர்பாக, திரினாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் மிகப்பெரிய தலைவராகவும் மரியாதைக்குரிய பெண் தலைவராகவும் மம்தா பானர்ஜி இருக்கிறார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மிகப்பெரிய விஷயம், இது. எனவே, வரலாற்று சிறப்புமிக்க இந்த அரசமைப்பு சட்ட திருத்தத்துக்கு அவர் ஆதரவளிப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

சஸ்பெண்ட் எம்.பிக்கள் பிடிவாதம்...

இந்த நிலையில், ராஜ்யசபாவில் ரகளை செய்து சஸ்பெண்ட் ஆகியுள்ள 7 எம்.பிக்களும் தாங்கள் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த கமால் அக்தர் கூறுகையில்,

மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. எங்களுடைய எம்.பி. பதவியே பறி போனால் கூட, மன்னிப்பு கேட்க மாட்டோம். எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நாங்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். எனவே, மக்களின் கருத்துகளையே பிரச்சனையாக எழுப்பினோம். தவறான ஒரு மசோதாவை கொண்டு வந்ததால் அதை எதிர்க்கிறோம்.

எங்களை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை ராஜ்யசபா தலைவர் கொண்டு வரவில்லை. மத்திய அரசு தான் கொண்டு வந்தது. சபை காவலர்களை கொண்டு எங்களை வெளியே தூக்கி வீசியதற்காக மத்திய அரசு தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சர்வாதிகார போக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு தவறிழைத்ததற்காக அவர்களிடமும் மத்திய அரசு மன்னிப்பு கேட்கட்டும். தவறான ஒரு சட்டத்தை எதிர்த்ததற்காக சஸ்பெண்ட் செய்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+