சைதை துரைசாமி அறக்கட்டளையின் ஆன்லைன் மூலம் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி
சென்னை: சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளையின் இணையதளம் மூலம் யுபிஎஸ்சி தேர்வு எனப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான பயிற்சிகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதநேய அறக்கட்டளை, சென்னை லியோ கிளப் ஆகியவற்றின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி பேசும்போது,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளை எழுத ஆர்வம் இருந்து, அதேவேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இளைஞர்களை, போட்டித் தேர்வுகளை எழுத ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மனிதநேய அறக்கட்டளை ஆண்டுதோறும் 10ம் வகுப்பு தேர்வில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 50 பேரை தத்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக பிளஸ் 1, பிளஸ் 2, பட்டப் படிப்பு அளித்து, அவர்களை ஐ.ஏ.எஸ்., போன்ற தேர்வுகளுக்கு தயார்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் 100 பேர் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கின்றனர்.
இணையதளத்தில் முதல்நிலைத் தேர்வுகளுக்குத் தேவையான புவியியல், அரசியல் அறிவியல், சமூகவியல், பொதுநிர்வாகம் ஆகிய பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை www.saidais.com என்ற மனிதநேய அறக்கட்டளையின் இணையதளம் மூலம் இலவசமாகப் பெறலாம்.
மேலும், பொது படிப்புக்குத் தேவையான புத்தகங்கள், தற்கால நிகழ்வுகள், பயிற்சி மையங்களின் வகுப்பறைகளில் ஆசிரியர் எடுக்கும் பாடங்கள், ஏற்கெனவே தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் பாடங்களின் குறிப்புகள், வினா வங்கிகள் போன்றவையும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications