மகளிருக்கு ராஜ்யசபாவிலும் இட ஒதுக்கீடு வேண்டும் - திருமாவளவன்

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2007-ம் ஆண்டு முதல் தமிழ்ச் சமுதாயத்துக்காக பாடுபடும் சிறந்த தலைவர்களுக்கு பொற்கிழியுடன் கூடிய விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அம்பேத்கார் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந் தேதி நடக்கிறது.
சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் நடைபெறும் இந்த விழாவில் அம்பேத்கார் சுடர் விருது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வழங்கப்படுகிறது. பெரியார் ஒளி விருது கி.வீரமணிக்கும், காமராஜர் விருது கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தேவநேய பாவணருக்கும் வழங்கப்படுகிறது.
காயிதே மில்லத் பிறை விருது கவிஞர் அப்துல் ரகுமானுக்கும், அயோத்தி தாசர் ஆதவன் விருது ஞானஅலாய்சியஸுக்கும் வழங்கப்படுகிறது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை வரவேற்கிறேன். இதை கொண்டு வந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
லோக்சபாவிலும் மகளிர் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும். உள் ஒதுக்கீட்டையும் இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றம், உள் ஆட்சி அமைப்புகளில் 50 சத வீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். அதேபோல ராஜ்யசபாவிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
புதிய, பழைய சட்டசபை கட்டிடங்களில் முதல்- அமைச்சர் கருணாநிதியின் படத்தை வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஜெயலலிதா தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்புகிறார். இது கண்டிக்க தக்கது.
மத்திய பட்ஜெட்டில் இலங்கை தமிழர்கள் மீட்பு- மறுவாழ்வு நடவடிக்கை குறித்து எதுவும் கூறப்படாதது வேதனை அளிக்கிறது. தலித்களுக்கு மத்தியிலும் மாநிலத்திலும் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications