அரசின் சிக்கன நடவடிக்கைகள் - மார்ச் 31ல் முடிவடையும்

பொருளாதார மந்த நிலை காரணமாக, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் பிசினஸ் கிளாஸ் விமான பயணம், முதல் தர சொகுசு விடுதிகள் என பல்வேறு ஆடம்பர செலவினங்களை குறைக்க சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்தியது.
கடந்த செப்டம்பர் மாதம் அமலுக்கு வந்த இந்த உத்தரவு 2009-10 நிதியாண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அடுத்த நிதியாண்டு, அதாவது வரும் ஏப்ரல் 1ம் தேதியில் அந்த உத்தரவு காலாவதியாகும் என்றும் தெரிகிறது.
இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் தங்களின் ஆடம்பர செலவினங்களையும், டாம்பீக நடவடிக்கைகளையும் தொடருவார்களா அல்லது மத்திய அரசு உத்தரவை புதுப்பித்து மீண்டும் நீட்டிகுமா என்பது விரைவில் தெரிய வரும்.
இந்த நடவடிக்கையின் எதிரொலியாக பெரும் பொருட் செலவில் ஹோட்டல்களில் தங்கியிருந்த மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, சசி தரூர் போன்றோர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் உத்தரவின் பேரில் அங்கிருந்து காலி செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சாதாரண வகுப்பிலேயே பயணம் செய்து வந்தார். ரயில் பயணத்தையும் கூட அவர் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானங்களில் எக்கானமி கிளாஸ் வகுப்புகளில் பயணம் செய்வதை மாட்டுக் கொட்டகை என்று கூறி சசி தரூர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பதும் நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications