இன்று நள்ளிரவு முதல் விமான எரிபொருள் விலை உயர்வு
டெல்லி: 2010-11ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் புதிய வரி விதிப்புகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக எண்ணெய் நிறுவனங்கள் விமானத்துக்கான எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.
ஏடிஎஃப் எனப்படும் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு ரூ.961 வரை அதிகரிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் சிக்கன வகுப்புக்கான கட்டணத்திலும் 10 சதவீதம் வரை சேவை வரி செலுத்தியாக வேண்டும். இந்த சேவை வரிச் சுமையுடன் தற்போது விமான எரிபொருள் விலை உயர்வும் சேர்ந்துள்ளது.
இந்த இரண்டு சுமைகளையும் விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தலையில் தான் கட்டும் என தெரிகிறது. இதனால், பல்வேறு விமான நிறுவனங்களும் கட்டண உயர்வு அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.