நாடு கடந்த தமிழீழ அரசு... மே 2ல் தேர்தல்!
கொழும்பு: தனி தமிழ் ஈழக் கோரிக்கையைக் கைவிடுவதாக தமிழ் தேசியக் கூட்டணி அறிவித்துவிட்ட நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் வரும் மே மாதம் நடக்கும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் ருத்திரகுமாரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு இனம், இன அழிப்புக்கு உள்ளாகிறது என நிரூபிக்கப்படும்பொழுது சர்வதேச சட்டக்கோட்பாடுகளான தற்பாதுகாப்பு, தற்காப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஈடுசெய் நடவடிக்கையாக சுதந்திர நாட்டினைக் கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டு. தற்போது இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனஅழிப்பு இன்று ஓரளவுக்கு உலக அரங்கில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை மே 2-ந்தேதி அனைத்து நாடுகளிலும் நடத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல்களை நடத்தி முடித்து, பிரதிநிதிகளை தெரிவு செய்து, மே 17, 19-க்கு இடைப்பட்ட காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வை கூட்டலாம் என எண்ணியுள்ளோம்.
இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாக கூறி மார்தட்டும் இலங்கை அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை ஒழுங்கு செய்து நடத்துவதற்கான செயற்பாட்டுக் குழுக்களை இதுவரை அறிவிக்கப்படாத நாடுகளுக்கு இம்மாத இறுதிக்குள் இவை அறிவிக்கப்படும்.
இத்தேர்தல்களில் போட்டியிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு எம் தேச விடுதலைக்காக உழைத்திட முன்வருமாறு தகமையும் ஆர்வமும் உடைய அனைவரையும் அழைக்கிறோம்.
இத்தேர்தல்களை வெற்றிகரமாக நடத்த இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரையும் தொண்டர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு கோருகிறோம்.
திட்டமிட்டவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை நடத்தி முடிப்பதற்கான முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அனைத்து தமிழர் அமைப்புகளையும் தமிழ்பேசும் மக்களையும் உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்..."
இவ்வாறு ருத்திரகுமாரன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications