கொள்ளையனை பிடிக்கச்சென்ற போலீஸ் படை மீது பெண்கள் தாக்குதல்
குன்டக்கல்: கொள்ளையனை பிடிக்கச் சென்ற போலீசாரை பெண்கள் கூட்டமாக வந்து முற்றுகையிட்டு தாக்கிய சம்பவம் ஆந்திர மாநிலம் குன்டக்கல்லில் நடந்தது.
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குன்டக்கல்லைச் சேர்ந்தவன் உசேன். பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தேடப்படுபவன்.
இவன் சில நாட்களுக்கு முன்பு விஜயவாடா காந்தி பார்க் அருகே உள்ள நகைக்கடையில் புகுந்து 850 கிராம் நகை, ரூ.34ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றான்.
இவன் மீது விஜயவாடா ஒன் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். உசேன் குன்டக்கல்லில் பதுங்கி இருப்பதாக விஜயவாடா போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து 10பேர் கொண்ட தனிப்படை போலீசார் குன்டக்கல் சென்றனர். உசேன் பதுங்கி இருக்கும் வீட்டை சுற்றி வளைத்தனர்.
இதையறிந்ததும் அந்த ஊரை சேர்ந்த பெண்கள் அங்கு மண்எண்ணெய் கேன், கத்தி, அரிவாளுடன் கும்பலாக திரண்டனர்.
திடீரென 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது பெண்கள் திடீரென போலீசார் மீது மண்எண்ணெய் ஊற்றினார்கள்.
எங்க ஊருக்குள் யாரையும் கைது செய்ய விடமாட்டோம் என்று கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் ஏட்டு சுந்தரம் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசாரை கண்டதும் பெண்கள் தப்பி ஓடினர்.
போலீசார், ஏட்டு சுந்தரம் உள்ளிட்ட 10 பேரையும் அங்குள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சுந்தரம் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications