பென்னாகரம் இடைத்தேர்தல்: வெளியூர் ஓட்டுக்களை வேட்டையாடும் அதிமுக!
பெங்களூர்: பெங்களூரில் வசிக்கும் பென்னாகரம் தொகுதி வாக்காளர்களிடம் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை நேற்று வாக்கு சேகரித்தார்.
பென்னாகரம் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கான அத்தனை முயற்சிகளிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
தொகுதிக்கு உள்ளே இருக்கும் வாக்குகளை பெறுவதற்கு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பென்னாகரத்தில் முற்றுகையிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொகுதிக்கு வெளியே உள்ள வாக்குகளை சேகரிக்க கட்சிகள் தனிக்குழுவை அமைத்து பிரத்தியேக பிரச்சார பணியில் ஈடுபட்டுட்டுள்ளன.
பென்னாகரத்தில் மொத்தமுள்ள சுமார் 1.75 லட்சம் வாக்காளர்களில் 30 ஆயிரம் பேர் வெளியூர்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஓட்டுவங்கி தேர்தல் முடிவை தீர்மானிக்கும் என நம்பப்படுகிறது.
எனவே ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பென்னாகரம்வாசிகளை பாமக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடந்த வாரம் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
இடைத்தேர்தல் நாளன்று சொந்த ஊருக்கு வரவேண்டும் என்றும் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பெங்களூரில் வசிக்கும் பென்னாகரம் தொகுதி வாக்காளர்களிடம் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை நேற்று வாக்கு சேகரித்தார்.
பெங்களூர் விஜயநகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மு.தம்பிதுரை பேசுகையில்,
தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாததால் வேலை தேடி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகப் பகுதிகளுக்கு வந்துள்ளனர்.
இங்கு வேலை தேடி வந்தாலும் நமது உரிமைகள் தமிழகத்தில் தான் உள்ளன. இந்த உரிமைகளை பறிக்கும் வகையில் 42 ஆயிரம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்திடம் புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் முறையிட்டதைத் தொடர்ந்து தற்பொழுது 19 ஆயிரம் வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு அதிமுக எப்போதும் பாதுகாப்பளிக்கும். எனவே பென்னாகரம் இடைத்தேர்தலில் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications