For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொன்சேகாவுக்கு மன்னிப்பே கிடையாது: ராஜபக்சே

By Staff
Google Oneindia Tamil News

Rajapakse
கோலாலம்பூர்: பொன்சேகாவுக்கு மன்னிப்பே கிடையாது என்று சிங்கப்பூர் பத்திரிகைக்கு ராஜபக்சே சூடாக பேட்டி அளித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

போருக்கு பின் இலங்கையில் ஏற்படுத்த இருக்கும் மாற்றங்கள், நிலவரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு ராஜபக்சே பதில் அளித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக இலங்கையை மேம்படுத்தப்போவதாகவும், விடுதலைப் புலிகள் வசமிருந்த பகுதிகளை முழுமையாக சீரமைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் வடக்கே மறு கட்டமைப்புப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் பெரியது என புகழந்துள்ளார் ராஜபக்சே.

போருக்கு பின் இலங்கையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும், அண்டை நாடான இந்தியாவுடன் போரானாலும் அமைதியானாலும் நல்ல உறவை கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் ராஜபக்சே குறிப்பிட்டார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை பெருக்க, இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு நடவடிக்கைக்கான உடன்பாடு மேற்கொள்வது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

இந்திய தொழிலதிபர்கள் இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டலாம் என்று குறிப்பிட்டுள்ள ராஜபக்சே, தற்போது ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் தளபதி சரத் பொன்சேகா குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில்,

பொன்சேகா ஒரு முட்டாள். தேர்தலில் போட்டியிட விருப்பம் இருக்கிறதா என்று அப்போதே கேட்டேன். கடைசி வரை என்னிடம் அதுபற்றி எதுவும் பேசவில்லை. என்றாலும் அவருக்கு நான் அறிவுரை கூறினேன்.

அரசியல் என்பது ராணுவம் போல அல்ல. ராணுவத்தில் ஒரு ஒழுங்கு, சட்ட திட்டம் இருக்கும். ஒரு உத்தரவு போட்டால் அதற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.

ஆனால் அரசியல் அப்படியல்ல. ஒரு உத்தரவு போட்டால் அது பல விதமான விளைவுகளை உண்டாக்கும். நான் நினைத்திருந்தால், அவரின் பணிக் காலத்தை நீட்டித்து தேர்தலில் போட்டியிடாமல் செய்திருக்க முடியும்.

ஆனால் நான் பயந்துவிட்டதாக யாரும் சொல்லிவிடக் கூடாது. எனவே போட்டியிடட்டும் என விட்டுவிட்டேன். பொன்சேகாவை மன்னித்து விடுவது இயலாது. நான் மன்னித்துவிட்டால், கோர்ட் நடவடிக்கைகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்? மற்ற குற்றவாளிகளுக்கு என்ன பதில் சொல்வது?.

இது ஆங்கிலேயரின் சட்ட திட்டம். இந்தியாவுக்கும் எங்களுக்கும் அவர்களை இதைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

பொன்சேகா பல ஆயிரம் வீரர்களை ராணுவ நீதி விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். ஒருமுறை 8,500 பேரை விசாரிப்பதாகத் தெரிந்தது. பின்னர் நான் சத்தம் போட்டதால் விடுவித்தார்கள் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X