பென்னாகரத்தில் 24ம் தேதி கருணாநிதி தலைமையில் திமுக கூட்டணி பிரசாரக் கூட்டம்
பென்னாகரம்: பென்னாகரத்தில் வருகிற 24ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.
பென்னாகரத்தில் வருகிற 27ம் தேதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் 25ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்பசேகரனுக்கு ஆதரவாக திமுக முன்னணியில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தற்போதைய திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் முதல் முறையாக முதல்வர் கருணாநிதி இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
வருகிற 24ம் தேதி அவர் கலந்து கொள்ளும் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
மாலை பென்னாகரம் அண்ணா திடலில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.
காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல்ரகுமான் எம்.பி., புரட்சி பாரதம் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி, விவசாயிகள்-தொழிலாளர் கட்சி பொன்.குமார், தமிழ் மாநில தேசிய லீக் திருப்பூர் அல்தாப், அருந்ததியர் மக்கள் கட்சி வலசை ரவிச்சந்திரன், பு.தா.இளங்கோவன் ஆகியோர் பேசுகிறார்கள்.
இதற்காக 24-ம் தேதி காலை வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து மொரப்பூர் செல்கிறார் கருணாநிதி. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் இண்டூர் அருகே உள்ள ஒரு விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் மாலை பொதுக்கூட்டத்திற்கு சென்று கலந்து கொண்டு பேசுகிறார்.
கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications