கீ்ழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை போல தேனியில் புதிய மருத்துவமனை
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல மருத்துவமனையைப் போல அனைத்து நவீன சிகிச்சை வசதிகளும் கொண்ட புதிய மன நல மருத்துவமனை தேனியில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் அன்பழகன் கூறுகையில், தற்போது தமிழகத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மட்டுமே மன நல மருத்துவமனை உள்ளது.
இதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மன நல நோயாளிகள் சிகிச்சைக்காக இவ்வளவு தூரம் வர வேண்டியுள்ளது.
இதைத் தவிர்க்கும் பொருட்டும், தென் மாவட்ட மக்களின் வசதிக்காகவும், தேனியில், ரூ. 10 கோடியில் புதிய அதி நவீன சிகிச்சைகளைக் கொண்ட மன நல மருத்துவமனை அமைக்கப்படும்.
தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ. 750 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதேபோல 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்திற்கு ரூ. 79 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மயக்க மருந்தியல் துறை இந்தியாவிலேயே மிகப் பெரிய துறையாகும். இது வரும் நிதியாண்டில் உயர் மையமாக தரம் உயர்த்தப்படும்.
கர்ப்பிணி்ப் பெண்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச அயோடின் கலந்த உப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
ரூ. 17 கோடி மதிப்பீட்டில் 150 பேர் தங்கி சிகிச்சை பெறக் கூடிய வசதியுடன் புதிய புற்று நோய் சிகிச்சை மையம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடங்கப்படும்.
வரும் ஆண்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 3889 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார் அன்பழகன்.