உப்பு விலை வீழ்ச்சி - தூத்துக்குடியில் உற்பத்தியாளர்கள் கலக்கம்
ஆறுமுகநேரி: வரலாறு காணாத அளவி்ல் உப்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆறுமுகநேரி சுற்றுபகுதியில் சுமார் 4 லட்சம் உப்பு மூடைகள் தேக்கமடைநதுள்ளது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது தூத்துக்குடி மாவட்டம். தூத்துக்குடியை அடுத்து ஆறுமுகநேரி சுற்று வட்டார பகுதிகளில் தான் அதிக அளவு உப்பு உற்பத்தி நடக்கிறது.
இங்கு கண்ணக்காடு, சாவக்காடு, தோணித்துறை, தலைவன்வடலி, சேர்ந்தபூமங்கலம், சல்லித்திரடு, மேலஅலம், ராஜஅலம், பஞ்சதாங்கி, வண்டிதடம், ஆகிய இடங்களில் உப்பளங்கள் உள்ளன.
சுமார் 2,200 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சிறிய அளவில் உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர்.
ஆறுமுகநேரி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம் மட்டுமல்லது வடமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
ஆனால் இன்றோ ஏற்றுமதி குறைந்து உப்புக்கு போதிய விலை இல்லாமல் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உப்பு உற்பத்தி செய்வதற்கு வெயில் அதிக அளவு உதவியாக இருக்கும். ஆனால் பருவ காலங்களில் உரிய நேரத்தில் போதிய மழை பெய்தால்தான் உப்புக்கு உரிய விலை கிடைக்கும்.
கடந்த ஆண்டு குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் பல லட்சம் டன் உப்பு இறக்குமதி செய்தனர். இதனால் ஆறுமுகநேரி சுற்றுபகுதியில் உற்பத்தி செய்த உப்பு வி்ற்பனையாகமல் தேக்கம் அடைந்தது.
இத்துடன் தற்போது உற்பத்தி செய்யும் உப்பும் சேர்ந்துள்ளதால் இங்கு அதிக அளவு உப்பு தேக்கம் அடைந்துள்ளது. உப்பு அம்பாரம் போடுவதற்கு சிலர் இடமின்றி உப்பளங்களை புல்டோசர் வைத்து சீர்செய்து அதன் மேல் அம்பாரம் போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு மூடை உப்பு உற்பத்தி செய்வதற்கு ரூ.70 முதல் 90 வரை செலவாகும். ஆனால் தற்போது ஒரு மூடை உப்பு ரூ.21 முதல் ரூ.30 வரையிலும், தரமான பழைய உப்பு ரூ.36 முதல் ரூ.45 வரையிலும் விற்பனை செய்யப்படுதவாக கூறப்படுகிறது.
உப்புக்கு போதிய கிராக்கி இல்லாததால் சுமார் 4 லட்சம் மூடை உப்புகள் தேக்கம் அடைந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற விலை வீழ்ச்சி அடைந்ததில்லை.
தற்போது போதிய வருவாய் இல்லாததால் உப்பு தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications