போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை-தமிழக அரசு
சென்னை: போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சசரிக்கை விடுத்துள்ளது.
அழிக்கப்பட வேண்டிய காலாவதியான மருந்துகளை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை மட்டும் மாற்றி மீண்டும் கடைகளுக்கு வினியோகித்த ஏழு பேர் கைது நேற்று செய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொடும் செயலில் ஈடுபட்ட கோயம்பேட்டில் உள்ள 'மீனா ஹெல்த் கேர்' எனும் மருந்து ஏஜன்சியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளும் அடக்கம்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலி மருந்துகளை கண்டுபிடிக்க மருந்து கட்டுப்பாட்டு புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் தலைமையில் ஆலோசனை...
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் போலி மருந்து விவகாரம் குறித்து இன்று அவசர ஆலோசனை நடந்தது. இதில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்புராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போலி மருந்துகள் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது.
விரைவில் இதுகுறித்து விரிவான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.












Click it and Unblock the Notifications