அதை அழகிரியிடமே கேளுங்கள்-கருணாநிதி
சென்னை: உங்ளுக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, இது குறித்து நீங்கள் அவரிடமே (அழகிரியிடம்) கேளுங்கள் என்று முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
பெண்ணாகரம் தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும், அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
27ம் தேதி இடைத் தேர்தலல் நடக்கும் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் கருணாநிதி இன்று பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இன்று காலை அவர் கார் மூலம் பென்னாகரம் கிளம்பினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: பெண்ணாகரம் இடைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
முதல்வர் கருணாநிதி: வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. நிச்சயம் வெற்றி பெறுவோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
கேள்வி: ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, உங்ளுக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளாரே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: இது குறித்து நீங்கள் அவரிடமே (அழகிரியிடம்) கேளுங்கள்.
கேள்வி: உங்களுக்கு பிறகு யாருக்கும் திறமை இல்லை என்பதுபோல கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: எனக்குப் பிறகு என்பது எந்த ஆண்டு முதல் என்று எனக்கே தெரியாது.
கேள்வி: திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே?
கருணாநிதி: சங்க இலக்கியத்தில் “களவியல்" என்று ஒரு பகுதி இருக்கிறது. அந்த அடிப்படையில் அதை அணுகுவோர் உண்டு என்றார்.
பெண்ணாகரம் பிரச்சாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு கிருஷ்ணகிரியில் தங்கும் முதல்வர் நாளை சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.