சென்னை ராணுவ குடோனில் தீ - பொருட்கள் நாசம்
சென்னை: சென்னையில் உள்ள ராணுவ குடோனில் நேற்றிரம் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் ஏராளமான பொருட்கள் நாசமாயின.
சென்னை கோட்டையில் உள்ள பழைய தலைமைச்செயலக வளாகத்தில் ராணுவ குடோன் உள்ளது. இங்கிருந்து தமிழகம் முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களுக்கும் வீட்டு உபயோக பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
இந்த குடோனில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்தவுடன், சென்னை உயர்நீதிமன்றம், திருவல்லிக்கேணி, தலைமைச்செயலகம் ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.
ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் 150 புதிய பிளாஸ்டிக் நாற்காலிகள், சோப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தீ விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று தமிழ்நாடு தீயணைப்பு துறை துணை இயக்குனர் விஜயசேகர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications