கிரிக்கெட் வாரிய பொருளாளராக சீனிவாசன் பதவி வகித்தது செல்லும்- உயர்நீதிமன்றம்
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் பதவியில் சீனிவாசன் இருந்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு இது தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சீனிவாசன் வாரிய பொருளாளராக இருந்து வந்தார். தற்போது அவர் செயலாளராக பதவி வகிக்கிறார்.
அந்த மனுவில்,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளராக என்.சீனிவாசன் பதவி வகிக்கிறார். இவர் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஐ.பி.எல். கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதன் மூலம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு மாறாக அவர் செயல்படுகிறார். வாரியத்தின் பதவியில் இருக்கும் ஒருவர் எந்த ஒரு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, அவர் பொருளாளராக பதவி வகிப்பது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
2008ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வர்த்தக நோக்க விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது முழுக்க முழுக்க சீனிவாசனுக்காக கொண்டுவரப்பட்ட திருத்தம் ஆகும். எனவே, அதையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி, முத்தையா மனுவைத் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து முத்தையா அப்பீல் செய்தார்.
இதை நீதிபதிகள் முருகேசன், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது சீனிவாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன் வாதிடுகையில், ஐ.பி.எல். மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டியாகும். அதற்கான விதிகளில், ஒருவரின் லாபத்திற்காக திருத்தங்கள் கொண்டுவரப்படவில்லை.
அந்த விளையாட்டு போட்டிகளில் வர்த்தக நோக்கத்திற்காகவும், அந்த விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காகவும்தான் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
எந்தவிதிகளையும் மீறி சீனிவாசன் பதவி வகிக்கவில்லை. எனவே, அவரது பொருளாளர் பதவியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள் முத்தையாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications