தேமுதிக வென்றால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தரப்படும்-விஜயகாந்த்

பென்னாகரம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து விஜயகாந்த் திறந்த வேனில் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக பல திட்டங்களை நான் அமல் செய்துள்ளேன். ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கி இருக்கிறேன். மாணவ-மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து அவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டரும் வழங்கியுள்ளேன்.
பெண் சிசுக் கொலையை தடுக்கும் வகையில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.50 லட்சம் வரை டெபாசிட் செய்துள்ளேன். இதையெல்லாம் நான் ஓட்டு வாங்குவதற்காக செய்யவில்லை. மக்கள் நல்வாழ்வுக்காக செய்துள்ளேன்.
20 ஆண்டுகள் கழித்து நான் இருப்பேனோ இல்லையோ. ஆனால், அந்த குழந்தைகள் வளர்ந்து ஆளாகி 20 ஆண்டுகள் கழித்து அவர்களின் வாழ்க்கைக்கு அது உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் இவற்றை செய்தேன். ஓட்டுக்காக செய்யவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக வரியில்லாத பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. அப்படியானால் விலைவாசி மட்டும் எப்படி அதிகரிக்கிறது. அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ள திமுக அரசை நம்பி வாக்களிக்காதீர்கள்.
பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணியசிவா நினைவு மண்டபம், பென்னாகரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக திமுக அறிவித்துள்ள சூழ்ச்சித் திட்டங்கள்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் போல் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் தேர்தல் முடியும் வரை மட்டுமே செயல்படும்.
பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக ஊழல் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்யும் திமுக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற அக்கறை காட்டவில்லை. செம்மொழி மாநாடும் மக்களை ஏமாற்றத்தான்.
பென்னாகரத்தில் திமுக தோல்வியடையும் என்பதால் திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தார். இன உணர்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தொகுதி மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே திமுக, அதிமுக, பாமக கட்சிகள் விரும்புகின்றன. பென்னாகரம் தொகுதி மக்கள் வேலைத் தேடி அண்டை மாநிலங்களுக்குச் சென்று வாழ்கை நடத்துகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்துவிட்டு லட்சக்கணக்கில் இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால் தருமபுரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தித் தருவதற்கு எந்த கட்சியும் ஆர்வம் காட்டவில்லை. தேமுதிக வெற்றிபெற்றால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தரப்படும்.
கூட்டணி வைத்தும், பணத்தை நம்பியும் தேர்தலை சந்திக்கும் கட்சிகளுக்கு மத்தியில் மக்களை நம்பி தனித்து போட்டியிடும் தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்றார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications