'பொறாமையால் கொல்ல துடிக்கிறார் ராஜபக்சே'-பொன்சேகா
கொழும்பு: "ஆளும் கட்சியின் முறைகேட்டையும் மீறி, அதிக ஓட்டுகள் வாங்கியதால், என் மீது அதிபர் ராஜபக்சே பொறாமைப்படுகிறார். என்னைக் கொல்லப் பார்க்கிறார்,"என ராணுவ கட்டுக்காவலை மீறி பேட்டி அளித்துள்ளார் பொன்சேகா.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயிடம் தோல்வி அடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடந்த மாதம் ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடற்படை தலைமையகத்தில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 2 கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக ராணுவ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராணுவ கெடுபிடிகளையும் மீறி, பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 டெலிவிஷன் சேனலுக்கு பொன்சேகா பேட்டி அளித்துள்ளார்.
எழுத்து மூலம் சேனல்காரர்கல் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் எழுதி அனுப்பி உள்ளார். அதில் பொன்சேகா கூறி இருப்பதாவது:
"என் மீதான குற்றச்சாட்டுகள், பொய்யானவை. நான் சிறை வைக்கப்பட்டது, சட்ட விரோதம். அதிபர் தேர்தலில், ராஜபக்சே செய்த முறைகேடுகளையும் மீறி, நான் அவரை விட அதிக ஓட்டுகள் பெற்றேன். அதனால் அவர் என்னைப் பார்த்து பொறாமைப்படுகிறார். அவரது வெற்றியை எதிர்த்து நான் வழக்கு தொடருவேன் என்று அவருக்கு தெரியும். எனவே, என் மீது பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி என்னை உள்ளே வைத்துவிட்டார். இது அதிகார துஷ்பிரயோகம்.
எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இருப்பினும், நாட்டு நலனுக்காக, ராஜபக்சேயின் நிஜ முகத்தை அம்பலப்படுத்துவேன். அதில் பின்வாங்க மாட்டேன்..." என்று கூறியுள்ளார்.
ராணுவ காவலை மீறி பொன்சேகா தனது பதில்களை அனுப்பியதை அறிந்து இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து, தேசிய பாதுகாப்புக்கான பத்திரிகை மைய நிர்வாக இயக்குநர் லட்சுமணன் குலுகல்லே கூறியதாவது:
"பொன்சேகா எப்படி தனது பதில்களை வெளியே அனுப்பினார் என்று முழு அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, அவரது மனைவி அனோமாவிடம் விசாரணை நடத்தி உள்ளோம்..." என்றார்.












Click it and Unblock the Notifications