புலிகளின் நினைவு சின்னங்களை அழிக்கும் இலங்கை அரசு!
வவுனியா: தமிழீழம் என்று அழைக்கப்படும் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஆட்சியில் அமைக்கப்பட்ட அனைத்து நினைவுச் சின்னங்களையும் அகற்றுவதில் குறியாக உள்ளது இலங்கை அரசு.
மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட துயிலிடங்கள், மாவீரர் நினைவுத் தூண்கள், தமிழர் அடையாளமான கலாச்சார சின்னங்கள் என ஒன்றுவிடாமல் அழித்தொழிக்கும்படி சிங்களப்படைகளுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வன்னிப் போருக்குப் பின், வட இலங்கையை சுற்றிப்பார்க்கப் போய் வந்த சில தமிழர்கள், இப்போது அந்தப் பகுதி கிட்டத்தட்ட சிங்களர் பிரதேசங்களாக, சிங்கள பெயர்ப் பலகைகளுடன் காணப்படுவதாகவும், பல இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் ஒன்றும் பாதியுமாக சிதைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
விடுதலைப் புலிகளின் ஆட்சியின்போது 400 பெரும் நினைவுச் சின்னங்கள், மாவீரர் துயிலிடங்களும் நிறுவப்பட்டிருந்ததாம்.
புலிகளின் முதல் கமாண்டரான சார்லஸ் அன்டனி, திலீபன் மற்றும் கிட்டு போன்றவர்களின் உருவச் சிலைகள் வடக்கிற்கு இனி அவசியமில்லை என இலங்கை அரசு அறிவித்துவிட்டே இந்த அழிப்பு வேலையில் இறங்கியுள்ளதாம்.
வன்னிப் போரில் தாய்லாந்து விமானங்கள்?:
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் இலங்கை ராணுவத்துக்கு தாய்லாந்து விமானப் படை உதவியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கியிருப்பதாக ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
போரில் தமிழருக்கு எதிராக தாக்குதலுக்குப் பயன்பட்ட தாய்லாந்து விமானங்கள் அந்த நாட்டுக்கு மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications