Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரபரப்பாய் முடிந்த பென்னாகரம் இடைத் தேர்தல்-80% வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

Electronic Voting Machine
பென்னாகரம்: பென்னாகரத்தில் இன்று நடந்த இடைத் தேர்தல் வாக்குப் பதிவு பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக முடிந்தது. சராசரியாக 80 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

திமுக, பாமக, அதிமுக, தேமுதிக ஆகிய நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 வேட்பாளர்கள் களத்தில் நிற்கும் பென்னாகரம் சட்டசபைத் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

திமுக சார்பில் இன்பசேகரன், அதிமுக சார்பில் அன்பழகன், பாமக சார்பில் தமிழ்க்குமரன், தேமுதிக சார்பில் காவேரி வர்மன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இன்று காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்கத் தொடங்கினர். வாக்குப் பதிவு தொடங்கியது முதல் மிகவும் ஆர்வத்துடன் ஆண், பெண் வாக்காளர்கள் வாக்களிக்கத் தொடங்கினர். பெண்கள் மத்தியில்தான் அதிக ஆர்வம் காணப்பட்டது.

காலை 10 மணி நிலவரப்படி 14 சதவீத வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 23,78 சதவீத வாக்குகளும், 12 மணி நிலவரப்படி 29.35 சதவீத வாக்குகளும், பகல் 1 மணி நிலவரப்படி 44.5 சதவீத வாக்குகளும், 2 மணி நிலவரப்படி 55.03 சதவீத வாக்குகளும், 4 மணி வரை 75% வாக்குகளும் பதிவாகியிருந்தன.

மாலை 5 மணியளவில் கிட்டத்தட்ட 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் போடுவதற்கு 5 மணிக்கு முன்பே வந்த பலரும் கூட்டம் அதிகமாக இருந்ததால் வாக்களிக்க முடியாமல் தாமதமானதால் அவர்களுக்கு டோக்கன்கள் தரப்பட்டன. இதன்மூலம் 5 மணிக்கு முன்னதாக வந்த அனைவரும் வாக்களிக்க வாய்ப்புத் தந்தனர் தேர்தல் அதிகாரிகள்.
இதனால் வாக்குப் பதிவு 80 சதவீதத்தையும் தாண்டும் என்று தெரிகிறது.

சரியான வாக்குப் பதிவு விவரத்தை தேர்தல் ஆணையம் இரவில் வெளியிடும்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் காமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவை இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்டிருந்தன. அதன் மூலம் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தர்மபுரியில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி வாக்குப் பதிவை நேரடியாக கண்காணித்தார்.

மின்னணு எந்திரக் குழப்பத்தால் வாக்குவாதம்:

பென்னாகரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆணைக்கல்லூரில் உள்ள வாக்குச்சாடிவயில் ஓட்டுப்போட்டவர்களுக்கு மின்னணு எந்திரத்தால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ஓட்டுப்போட வரும் முதியவர்கள் மற்றும் படிக்காதவர்களிடம் அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளரின் பெயரும், சின்னமும் முதல் எந்திரத்தில் உள்ளது என்று சொல்லி அனுப்பியுள்ளனர்.

ஆனால் வாக்குச்சாவடியில் முதலாவதாக இருக்க வேண்டிய மின்னணு எந்திரம் இரண்டாம் இடத்திலும், இரண்டாவதாக இருக்க வேண்டிய மின்னணு எந்திரம் முதலிலும் வைக்கப்பட்டிருந்ததாம்.

இதனால் வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. அரசியல் கட்சியினருக்கோ கடும் கோபம் ஏற்பட்டது. எயந்திரத்தை மாற்றி வைத்ததால், ஓட்டுப்போட வந்தவர்கள் குழப்பமடைந்து விட்டனர் என்று கூறி தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக வேட்பாளர் புகார்:

அதிமுக வேட்பாளர் அன்பழகன் தாழப்பள்ளம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்குச் சென்றார். முதல் ஆளாக அவர் காத்திருந்தபோது வாக்குப் பதிவு தொடங்கவில்லை. இதுகுறித்து அவர் வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்குப் பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்குப் பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு அதன் பின்னரே வாக்குப் பதிவு தொடங்கியது.

இதுகுறித்து அன்பழகன் கூறுகையில், வாக்குப் பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டனர் என்று குற்றம் சாட்டினார்.

திமுக வேட்பாளர் இன்பசேகரன் குள்ளான்பட்டி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 60,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதேபோல தேமுதிக வேட்பாளரும் வாக்களித்தார்.

மொத்தம் 250 வாக்குச் சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டிருந்தன. இவற்றில் 27 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தேர்தல் அதிகாரிக்கு செல்போன் கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மணி நேரமும் பதிவான ஓட்டுகள் குறித்து அவ்வப்போது எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் அதிகாரிகளுக்கு, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்து வாக்களிக்க முயன்றால் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 171 (டி), 171 (எப்) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு ஒரு ஆண்டு சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

பென்னாகரம் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து 8 பேர். இவர்களில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 892 பேர் ஆண்கள். 98 ஆயிரத்து 116 பேர் பெண்கள்.

கிட்டத்தட்ட 3000 மத்திய, மாநில போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சீலிடப்பட்டு, தர்மபுரிஅரசு கலைக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஸ்டிராங் ரூமில் வைக்கப்படும். மார்ச் 30ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்குப்பதிவை பார்வையிட்ட பூடான் குழு:

இன்று நடந்த வாக்குப் பதிவை பூடானிலிருந்து வந்திருந்த 10 பேர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்,

பூடான் தேர்தல் ஆணையர் தஷி கைல்ட்ஷென் தலைமையிலான குழுவினர் இன்று பென்னாகரம் தொகுதியில் சில வாக்குச் சாவடிகளை நேரில் பார்வையிட்டனர். அவர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரி கமல் சர்மா உடன் வந்திருந்தார்.

முன்னதாக, நேற்று அவர்கள் தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையையும் அக்குழு பார்வையிடுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+