அதிமுக வேட்பாளர் ஓட்டுப்பதிவு செய்தபோது எந்திரம் கோளாறு
பென்னாகரம்: அதிமுக வேட்பாளர் அன்பழகன் ஓட்டுப்போடச் சென்றபோது வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தாளப்பள்ளம் ஓட்டுச்சாவடியில் அரை மணி நேரம் ஓட்டுப்பதிவு தடைபட்டது.
பென்னாகரம் சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் காலையிலேயே தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் ஓட்டளித்தனர்.
திமுக வேட்பாளர் இன்பசேகரன் சாலைக்குள்ளான்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தோடு சென்று வாக்களித்தார்.
அதிமுக வேட்பாளர் அன்பழகன் தாளப்பள்ளத்தில் ஓட்டுப்பதிவு செய்யச் சென்றார். அப்போது ஓட்டுச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு அரை மணி நேரம் கழித்து ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதிமுக வேட்பாளரும் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், 'தேர்தல் ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆனால் இன்று காலை நான் ஓட்டளிக்க வந்தபோது மின்னணு இயந்திரத்தில், கோளாறு ஏற்பட்டது. மின்னணு எந்திக்கோளாறை சரி செய்வதில் தேர்தல் அதிகாரிகள் அலட்சியம் காட்டினர்' என்றார்.
தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மன் சாம்பல்பட்டி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு போட்டார்.
மக்கள் குரல் நிருபர் மீது தாக்குதல்:
இந் நிலையில் செய்தி சேகரிக்கச் சென்ற மக்கள் குரல் பத்திரிக்கை நிருபரை திமுகவினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் மக்கள் குரல் நிருபர் பாண்டியன் கொடுத்துள்ள புகாரில், கௌரிசெட்டிப்பட்டி என்ற இடத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக செய்திகள் வந்தன. இதையடுத்து செய்திகள் சேகரிக்கச் சென்ற போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைப் பார்த்த நான் படம் பிடித்தேன்.
அப்போது என்னை துரத்திய திமுவைச் சேர்ந்த ஜி.கே. போர்வெல் நிறுவன ஆட்கள், என்னை அடித்ததுடன், என்னிடம் இருந்த கேமராவையும் சேதப்படுத்திவிட்டனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் அன்பழகன் உதவியோடு இந்தப் புகாரை பாண்டியன் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications