பென்னாகரம் தேர்தல்- மேச்சேரியில் மீண்டும் மோதல் - 7 பாமகவினர் கைது
பென்னாகரம்: பென்னாகரம் எல்லையில் உள்ள மேச்சேரி பகுதியில் நேற்று நள்ளிரவிலும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏழு பாமகவினரை இன்று காலை போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பென்னாகரம் தொகுதியின் எல்லையில் உள்ள மேச்சேரியில் நேற்று வாக்குப் பதிவு தினத்தன்று திமுக , பாமக வினருக்கிடையே கடும் மோதல் மூண்டது. கள்ள ஓட்டுப் போட முயல்வதாக இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி மோதிக் கொண்டனர்.
இதில் திமுகவினரின் கார்கள் தாக்கப்பட்டன. பதிலுக்கு திமுகவினர் நடத்திய தாக்குதலில் பாமகவினரின் அலுவலகம் சூறையாடப்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர். பெரும் பதட்டம் நிலவுவதால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். ஐந்து வாகனங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. கட்சிகளின் கொடிக் கம்பங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டன.
இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.
7 பாமகவினர் கைது
இதற்கிடையே, மேச்சேரி மோதல் தொடர்பாக இன்று 7 பாமகவினரை போலீஸார் கைது செய்தனர்.
மோதலில் காயமடைந்த மேச்சேரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜா, கோல்காரனூரை சேர்ந்த மணிவண்ணன் உள்பட சிலர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேரை சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று போலீசார் இன்று கைது செய்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.