ஆசிரமம் குறித்த செய்தியைக் கண்டித்து கல்கி பக்தர்கள் உண்ணாவிரதம்
சென்னை: கல்கி ஆசிரமம் குறித்தும், கல்கி குறித்தும் வெளியான செய்திகளுக்குக் கண்டனம் தெரிவித்து அவரது பக்தர்கள் சார்பில் சென்னையில் உண்ணாவிரதம், கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை நடைபெற்றன.
சமீபத்தில் கல்கி ஆசிரமம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. கல்கி சாமியார் ஆசிரமத்தில் பெண்களுக்கு போதை மருந்து தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த செய்திகளைக் கண்டித்து சென்னையில் கல்கி பக்தர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலை மின்சார வாரிய அலுவலகம் பின்புறமுள்ள தாராபூர் டவர் அருகில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு கல்கி பக்தர்களின் முதன்மை ஆலோசகர் நாமன் தலைமை தாங்கினார். சிரிப்பு நடிகர் தாமு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தின் போது தொலைக்காட்சிகளில் போதை மருந்து உட்கொண்ட நிலையில் காணட்டப்பட்ட பெண் பக்தர்களான பவித்ரா, தேஜசா போன்ற பெண் சீடர்கள் அளித்த விளக்கங்கள் அகன்ற திரையில் பக்தர்களுக்கு ஒளிபரப்பி காண்பிக்கப்பட்டது.
'உடல் தானாக தூக்கிப் போட்டது'
அதில், நாங்கள் பல வருடங்களாக கல்கி பகவான் பக்தர்களாக இருக்கிறோம். பகவான் எங்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து நாங்கள் விரதம் இருந்தோம், அதில் சில மாதங்கள் வெறும் பழங்களை மட்டும் சப்பிட்டு வந்தோம். பின்னர் 10 நாட்களுக்கு தண்ணீரை மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தோம். தீட்சை வழங்கும் நாள் அன்று கல்கி பகவான் எங்கள் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்து தீட்சையளித்தார். அப்போது எங்களுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. அதில் நாங்கள் எங்களையே மறந்த நிலையை உணர்ந்து தீட்சை பெற்றோம். அப்போது எங்களது உடல் பரவசத்தில் தானாக தூக்கி போட்டது. இதை சில தொலைக்காட்சிகளில் தவறாக சித்தரித்து காண்பிக்கப்பட்டுள்ளன. இது எங்களுக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்துகிறது என்றனர்.
சிரிப்பு நடிகர் தாமு, கல்கி சாமியாரின் சிறப்புகளையும், அவரால் தான் பெற்ற நன்மைகளையும் விளக்கிக் கூறினார். வீடியோ காட்சிகளையும் மறுத்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications