மதுரையில் லாரிகள் நுழைய தடை - காவல்துறை பரிசீலனை
மதுரை: சென்னையில் தாம்பரம் பகுதியில் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது போன்று, மதுரையிலும் லாரிகள் நுழைய தடை விதிக்கும் நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது என்று மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்து போலீசாருக்கான ஏசி நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:
பெரியார் பஸ் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள ஏசி நிழற்குடை போன்று, நகரில் இருபத்து ஐந்து இடங்களில் ஏசி நிழற்குடை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவைகளை போத்தீஸ் நிறுவனம் வழங்க உள்ளது.
அனுமதி இல்லாத 125 ஆட்டோக்கள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டன. இது போன்ற நடவடிக்கை தொடரும்.
மதுரையில் லாரிகளை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கிய பின்னரும், விதிமுறைகளை பலர் மீறி வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை மூலம் தினமும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்னையில் தாம்பரம் பகுதியில் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது போன்று, மதுரையிலும் லாரிகள் நுழைய தடை விதிக்கும் நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது.
லாரி உரிமையாளர்கள் சங்கங்களிடம் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பு இது குறித்த முடிவு எடுக்கப்படும்' என்றார்.