For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முழுமையாக ஒத்துழைத்தார் மோடி - தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம்: ராகவன்

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குல்பர்க் சொசைட்டி படுகொலைகள் தொடர்பான விசாரணைக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முழுமையாக ஒத்துழைத்தார். அவரிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அவரை விசாரித்த விசாரணை அதிகாரி பூரண திருப்தி தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் அவரிடம் மீண்டும் விசாரிக்கக் கூடும் என்று கூறியுள்ளார் சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவர் ஆர்.கே.ராகவன்.

குல்பர்க் சொசைட்டி படுகொலைகள் தொடர்பாக நேற்று கிட்டத்தட்ட 10 மணி நேரம் எஸ்.ஐ.டி. உறுப்பினரான ஏ.கே.மல்ஹோத்ராவால் விசாரிக்கப்பட்டார் நரேந்திர மோடி.

விசாரணையின்போது எஸ்ஐடி தலைவர் ஆர்.கே.ராகவன் இருக்கவில்லை. இந்த நிலையில் விசாரமணை குறித்து ராகவன் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது...

இந்த விசாரணை மிக முக்கியமான முன்னேற்ற நடவடிக்கையாகும். இந்த வழக்கில் நிலவி வந்த பல்வேறு குழப்பங்கள், மர்மங்கள், புதிர்களுக்கு விடை காண இந்த விசாரணை தேவைப்பட்டது. அந்த விசாரணை நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விசாரணை அறிக்கையை ஏப்ரல் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எனவே அதற்குள் தாக்கல் செய்யப்படும்.

முதல்வர் மோடியை விசாரித்த அதிகாரியான முன்னாள் சிபிஐ டிஐஜி ஏ.கே.மல்ஹோத்ரா மிகவும் திறமையானவர். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அவரும் விசாரணைக்குப் பின்னர் திருப்திகரமாக உள்ளார். இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

முதல்வரை விசாரணைக்கு கொண்டு வர முடிந்தது திருப்தி தருகிறது. அதை பாராட்ட வேண்டும்.

முதல்வரிடம் குல்பர்க் சொசைட்டி படுகொலைகள் குறித்து விரிவான கேள்விகள் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விகளை நானும், மல்ஹோத்ராவும் அமர்ந்து தீவிரமாக ஆலோசித்து முடிவு செய்தோம். குல்பர்க் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் மீது நாங்கள் மிகுந்த அக்கறையும், கவலையும் கொண்டுள்ளோம். நீதியின் கண்ணிலிருந்து யாரும் தப்பி விடாமல் கவனமாகவே இருக்கிறோம். உச்சநீதிமன்றம் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே நடந்து வருகிறோம்.

மல்ஹோத்ராவிடம், மோடி அளித்த பதில்கள் குறித்து இன்னும் நான் விவாதிக்கவில்லை.

நான் நேரடியாக விசாரணைக்கு வராதது பெரிய விஷயமல்ல. சிபிஐயில் நடைமுறையில் உள்ளதைத்தான் இங்கும் நடைமுறைப்படுத்தியுள்ளேன். சிபிஐயில் இயக்குநரே நேரடியாக யாரையும் விசாரிப்பதில்லை. சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிதான் யாரையும் விசாரிப்பார். அதுதான் இங்கும் நடந்துள்ளது. இதில் பெரிய விசேஷம் ஏதுமில்லை.

மோடி என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். மல்ஹோத்ராவிடம் இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். அதன் பிறகுதான் மோடியை மீண்டும் விசாரிப்பதா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். தேவைப்பட்டால் விசாரணைக்கு அவர் மீண்டும் அழைக்கப்படலாம். ஒருவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரிடமிருந்து மேலும் சில பதில்கள் தேவைப்படும் என்று கருதினால் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைக்க எஸ்ஐடிக்கு முழு அதிகாரம் உள்ளது.

ஜாகியா ஜாப்ரி கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் மோடியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவரிடம் 62 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுவது கற்பனையானது. அவ்வளவு கேள்விகள் எல்லாம் கேட்கப்படவில்லை.

எஸ்ஐடி அதிகாரிகள் மிகவும் திறமையானவர்கள். அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். பாரபட்சமாக யாரும் நடக்கவில்லை. அனைவருமே கோர்ட் நியமித்தவர்கள்தான். எனவே பாரபட்சம் இருக்க வாய்ப்பில்லை.

நரேந்திர மோடி முழு மகிழ்ச்சியுடன் விசாரணைக்கு வந்தார். கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார். முழுமையாக ஒத்துழைத்தார். அவரது பதில்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து மல்ஹோத்ரா முழு திருப்தி அடைந்துள்ளார். முதல்வர் மோடிக்கும், மல்ஹோத்ராவுக்கும் இடையே நடந்த இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவே நான் கருதுகிறேன்.

என் மீதும், எனது குழுவினர் மீதும் எந்தவித அரசியல் நெருக்கடியும் இல்லை. மிகவும் ரிலாக்ஸ்டாக நாங்கள் உள்ளோம். எனது கடமையை நான் சரியாக செய்து வருகிறேன் என்றார் ராகவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X