பெங்களூர் மாநகராட்சிக்குத் தேர்தல் - வாக்குப் பதிவு தொடங்கியது
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.
198 வார்டுகளைக் கொண்ட பெங்களூர் மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் 1342 பேர் கலந்து கொண்டு போட்டியிடுகின்றனர். 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்தத் தேர்தலில் வீணா என்ற அரவாணியும் போட்டியிடுகிறார். பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் முதல் அரவாணி என்ற பெருமையை இதன் மூலம் இவர் பெறுகிறார். ஒக்கலிபுரம் வார்டில் இவர் போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவை முக்கியக் கட்சிகளாக களத்தில் உள்ளன.
காங்கிரஸ் கட்சிக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தீவிரப் பிரசாரம் செய்துள்ளார். பெங்களூர் நகரை மேம்படுத்த தான் முதல்வராக இருந்தபோது எடுத்த நடவடிக்கைகளை எடுத்துக் கூறி அவர் பிரசாரம் செய்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக பாஜக சார்பில் அதன் தலைவர் அனந்தகுமார் பிரசாரம் செய்தார். அவர் கிருஷ்ணாவின் பிரசாரத்துக்குப் பதிலளித்துப் பேசுகையில், தான் என்ன செய்தேன் என்பதையெல்லாம் கிருஷ்ணா விளக்கிக் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு செய்த அவரை ஏன் பெங்களூர் மக்கள் தோற்கடித்தனர் என்பதையும் அவர் விளக்கிக் கூற வேண்டும். 2004 தேர்தலில் மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுத்ததையும் கிருஷ்ணா மறந்து விடக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications