திருடப்பட்ட குழந்தைகளோ.. வாடகை குழந்தைகளோ!!
இந்தியாவின் ஏழ்மையை ஓழிப்போம், ஏழைகள் இல்லா பாரதம், இப்படி ஏராளமான கோஷங்கள் ஒருபுறம். டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் பிச்சைக்காரர்கள் கைது, பிச்சையெடுப்பவர் விரட்டியடிப்பு மறுபுறம்.
வறுமை ஓழிப்பு பிரச்சாரம், வறுமை ஓழிப்பு மாநாடு இப்படி மாறி மாறி எது நடந்தாலும் மக்களின் வாழ்க்கையோடு ஓட்டி பிறந்திட்ட வறுமை மாறிவிட்டதா என்றால் இல்லை என்றுதான் கூறமுடிகிறது... காரணம் பல்வேறு விதமான பிரச்சனை கலந்த வாழ்க்கையில் மனிதனின் மனஆசை ஓட்டமும் ஒரு காரணம். அனாதைகள் தானாகவே ஒருபக்கம் உருவாகிறார்கள். மற்றொரு பக்கம் உருவாக்கப்படுகிறார்கள்.
சராசரி வருமானம் கொண்ட ஒரு குடும்பத்தில் சுமைகள் அதிகமாகும்போது அக்குடும்பம் சிதறுண்டு போய் விடுகிறது. குடும்ப உறுப்பினர்களில் யாராவது உடல் குறைபாடுகளோடு பிறந்து விட்டால் அது அதைவிட கொடுமையாகி விடுகிறது. ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே குறைபாடுள்ள மனிதரை குடும்ப உறுப்பினராக பார்க்கின்றனர். மற்றவர்களோ உதாசீனப்படுத்த தொடங்கி விடுவதால் அனாதைகளாக்கப்பட்டவர்கள் உயிர் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அதனை தொடர்ந்து தன்னை புறக்கணித்தவர்களை விட்டு விலகி வெகுதூரத்திற்கு சென்று பிச்சையெடுத்து வாழ்க்கையை ஓட்ட தொடங்கி விடுகின்றனர்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், ஆலயங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சினிமா தியேட்டர் வாசல்கள் என இவர்கள் முகாமிட்டு இருக்கும் பகுதிகள் அதிகம். அதுமட்டுமின்றி தொடர் ரயில் வண்டிகளில் சில ஊனமுற்றவர்கள் ஏறி நம் இருக்கும் பெட்டிகளை சுத்தப்படுத்தியோ, பாட்டு பாடியோ பிச்சை எடுப்பதும், பேரூந்துகளில் இருக்கும்போது நம்மிடம் அட்டைகளை கொடுத்தும் பிச்சையெடுக்கும் கூட்டம் ஓருபுறம்.
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்:
தற்போது தென்மாவட்டங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த பல நூறு குடும்பத்தினர் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டும், மற்றொரு கையில் குழந்தையை பிடித்துக் கொண்டும் சாப்பிடலை, காசு கொடு என்று கேட்டு நச்சரிக்கும் அவலம் தற்போது அதிகரித்துள்ளது.
இப்பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும்போது கைப்பிள்ளைகளை கிள்ளி விட்டு அழவைத்து கேட்கும்போது கல்மனசும் கரைந்து காசை எடு்த்து போட்டு விடுகிறது. இதே கும்பலில் திருமணம் ஆகாத கன்னி பெண்கள் மற்றும் சிறுமிகள் இச்செயலில் ஈடுபடுகின்றனர். பிச்சையெடுக்கும் பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பதால் அதிகளவு வசூல் கிடைக்கிறது.
திருடப்பட்ட குழந்தைகளோ.. வாடகை குழந்தைகளோ:
அதே சமயம் தள்ளாடும் வயதில் முதியவரோ, ஊனமுற்றவரோ போய் பிச்சை கேட்டு கையேந்தினால் கொடுப்பவர் மனம் முகம் சுளிக்க வைக்கிறது.
தென்மாவட்டத்தில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் குடும்பத்தினர் கொண்டு வரும் குழந்தைகளுக்கும், அப்பெண்களுக்கும் எவ்விதத்திலும் முக ஓற்றுமையோ, கலர் காம்பினேசனோ இல்லை என்பதும் இக்குழந்தைகள் வெளிமாநிலத்தில் இருந்து திருடி வந்தவையா, இல்லை வாடகை குழந்தைகளோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
லாரி டிரைவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள்:
மிருகங்களை வைத்து பிச்சை எடுத்தால் புளு கிராஸ் வருகிறது. ஆனால் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கைக்குழந்தைகளை காட்டி பிச்சை எடுக்கும் பெண்கள் பலர் பீகார், ஆந்திரா, குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், இதில் சிலர் இப்பெண்களை பாலியல் தொந்தரவு செய்வதும் இப்பெண்களில் சிலர் லாரி டிரைவர்களால் ஏமாற்றி அழைத்து வரப்பட்டு நிர்கதியாக்கப்பட்டவர்களும் அடக்கம் என்றும் கூறப்படுகிறது.
பிச்சை எடுப்பது குற்றம் என்று கூறி சட்டத்தின் லத்திகள் பல மாவட்டங்களில் சுழன்று பிச்சை எடுக்கும் ஆதரவற்றவர்களை கம்பிக்குள் தள்ளியிருக்கிறது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஆலயங்களில் பிச்சையெடுக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிச்சையெடுக்கும் ஒரு பெண்ணிடம் கேட்டபோது, எனக்கு 50 வயது. ஆம்பிளை பிள்ளை இல்லை, என் புருஷன் செத்துட்டாரு, 2 பொட்ட புள்ளைக. அதுகளை கட்டி கொடுக்க எதுவும் கிடையாது. வேற வேலை தெரியாது. எங்க குடும்பத்தை காப்பாத்த யாரும் இல்லை. சமஞ்ச பொண்ணுங்களை வேலைக்கு அனுப்ப பயமா இருக்கு. அதனால தான் நான் பிச்சை எடுக்குறேன். தினமும் 125 வரை கிடைக்கு. ரேசன் அரிசி வாங்கி குடும்பத்தை ஓட்டுறேன் என்றார்.
60 வயது முதியவரோ, எனக்கு 2 பையங்க, பொண்டாட்டி செத்துட்டா. கூலி வேலைதான் செஞ்சேன். புள்ளைகளும் கல்யாணம் முடிஞ்ச பிறகு என்னை அம்போனு விட்டுடாங்க, யோசிச்சு பார்த்தேன், சரி நம்ம ஊர்ல இருக்க கூடாதுதான் குத்தாலம் பக்கம் வந்துட்டேன். என் சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை. சொந்த ஊரு மதுரை பக்கம். இப்போ நிம்மதியா இருக்கேன் என்றார்.
சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது!.













Click it and Unblock the Notifications